வேளாண் பல்கலை விவகாரத்தில் அரசியல் நோக்கம்: குமாரசாமி
பெங்களூரு: 'மாண்டியா வேளாண் பல்கலைக்கழகம் தொடர்பாக வைக்கப்படும் குற்றச்சாடுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை' என, மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்து உள்ளார்.மத்திய கனரக தொழில் துறை அமைச்சரும், ம.ஜ.த., தலைவருமான குமாரசாமியின், 'எக்ஸ்' தள பதிவு:மாண்டியா வேளாண் பல்கலைக்கழகம் தொடர்பாக, என் மீது எழுந்துள்ள சந்தேகங்கள் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. இது முழுக்க முழுக்க, அரசியல் நோக்கம் கொண்டதாக உள்ளது.மாண்டியாவில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதை முழு மனதுடன் வரவேற்கிறேன். வளர்ச்சி விஷயங்களில் ஒரு போதும் அரசியல் செய்தது இல்லை.பல்கலைக் கழகங்களுக்கு கட்சி தலைவர்களின் பெயர் சூட்டுவது போன்ற அரசியல் செய்ய எனக்கு தெரியாது. மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்து உள்ளேன்.மாண்டியா மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக மாவட்டத்தின் நலன்களை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. இவ்விஷயத்தில் எந்த குழப்பமும் இல்லை. அப்படி இருக்கையில், வீண் பிரச்னைகளை கிளப்பும் எந்த நோக்கமும் இல்லை. என்னை பற்றி தவறான செய்திகளை இணையத்தில் பரப்புவோருக்கு, விரைவில் உண்மை தெரியவரும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.