பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி ராஜகோபுரம் பணிகள் ஆரம்பம்
தங்கவயல் : ராபர்ட்சன்பேட்டையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில் வளாகத்தில் ராஜகோபுர பணிகள் நேற்று துவங்கின.தங்கவயலில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்பது பக்தர்களின் பல ஆண்டு கனவு.கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத் துறை ராஜகோபுரம் கட்டுவதற்கு 2024ம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. இதற்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.கடந்த மே மாதம் பூமி பூஜை போடப்பட்டது. கட்டுமானப் பணிகள் நேற்று துவங்கின. பெங்களூரின் பொதுப் பணித்துறை பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வார்டு கவுன்சிலர் கருணாகரன் ஆகியோர் கட்டடப் பணிகளின் வரை படங்களுடன் ஆலோசனை நடத்தினர்.ராஜகோபுர கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க எம்.எல்.ஏ., ரூபகலா கேட்டுக் கொண்டுள்ளார்.