தனியார் தொண்டு நிறுவனங்கள் சாலைகளை தத்தெடுக்க வேண்டும்
பெங்களூரு: 'பெங்களூரில் உள்ள சாலைகளை தனியார் தொண்டு நிறுவனங்கள் தத்தெடுத்து, அவற்றை பராமரிக்க வேண்டும்' என முதல்வர் சிவ குமார் கோரிக்கை விடுத்துள்ளார். பெங்களூரில், 'கழிவுகளிலிருந்து விடுதலை' எனும் பெயரில், மாபெரும் துாய்மை இயக்கம் ஹெப்பால் மேம் பாலம் அருகிலுள்ள பகுதியில் நேற்று துவங்கியது. இதில், முதல்வர் சிவகுமார், பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, சுற்றுலா துறை அமைச்சர் ஜார்ஜ், மத்திய இணையமைச்சர் ஷோபா, போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வர் சிவகுமார் துாய்மை பணியில் ஈடுபட்டார். பின், அவர் பேசியதாவது: பெங்களூரை மக்கள் நன்கு பராமரிக்க வேண்டும். இந்த இயக்கத்தின் மூலம் நகரை துாய்மைப் படுத்துவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நகரை சுத்தமாக வைப்பதில் மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நகரில் உள்ள சில சாலைகளை தத்தெடுத்து, அந்த சாலைகளை துாய்மையாக பராமரிக்குமாறு கோரிக்கை வைக்கிறேன். குறைந்தபட்சம் நான்கு சாலைகளை பராமரித்தாலே போதும். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி மாநில அரசு கவுரவிக்கும் . இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா பேசியதாவது: பெங்களூரில், 1,616 இடங்களில் 22,732 டன் குப்பை சேர்ந்து உள்ளது. உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம். பல ஆண்டுகளாக பொது இடங்களில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. சட்ட விரோதமாக குப்பை கொட்டுவோர் பயன்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்ய ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.