உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது விழுந்ததில் பேராசிரியர் காயம்

 ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது விழுந்ததில் பேராசிரியர் காயம்

துமகூரு: தேவராயனதுர்கா மலையில், 'ரீல்ஸ் வீடியோ' எடுக்க முற்பட்ட பேராசிரியர், கால் தவறி பாதாளத்தில் விழுந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். துமகூரு நகரின், பள்ளாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சிவபிரசாத், 45. இவர் தற்போது ஹாசன் மாவட்டம், அரசிகெரே நகரில் உள்ள பி.யு.சி., கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். ஞாயிறு கல்லுாரிக்கு விடுமுறை என்பதால், நேற்று துமகூரு மாவட்டத்தின், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான தேவராயனதுர்கா மலைக்கு, நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார். அழகான சூழ்நிலையில், ரீல்ஸ் வீடியோ எடுக்க விரும்பினார். தேவராயனதுர்கா கோவிலின் பின் பகுதியில் உள்ள அபாயமான, செங்குத்தான பாறை மீது ஏறினார். ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது, கால் தவறி மலை மீதிருந்து ஆழமான பாதாளத்தில் விழுந்தார். இவர் விழுந்ததை கண்ட சுற்றுலா பயணியரும், அப்பகுதியினர் உடனடியாக பள்ளத்தில் இறங்கி, சிவபிரசாத்தை காப்பாற்றி, மேலே அழைத்து வந்தனர். இரண்டு கால்களில் பலத்த அடிபட்டுள்ளதால், துமகூரின், சித்தகங்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார். பாதாளம் அடி வரை விழாமல், நடுவில் உள்ள இடத்தில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவ இடத்தை போலீசார், நேரில் பார்வையிட்டனர். சுற்றுலா தலங்கள், நீர்வீழ்ச்சிகள், உயரமான மலை உச்சிகளில் நின்று உயிரை பணயம் வைத்து, ரீல்ஸ் செய்கின்றனர். சமூகவலைதளங்களில் 'லைக்ஸ்' பெறுவதற்காக, இது போன்று செய்கின்றனர். இது பொறுப்பற்ற செயலாகும். சுற்றுலா பயணியர் இத்தகைய அபாயமான இடங்களுக்கு செல்லும் போது, செல்பி, ரீல்ஸ் செய்வதில் ஆர்வம் காட்ட கூடாது என, அரசும், போலீஸ் துறையும் எச்சரித்துள்ளன. ஆனால், இந்த எச்சரிக்கையை, பலரும் பொருட்படுத்துவதில்லை. இது அசம்பாவிதங்களுக்கு காரணமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி