உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயலில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி: வந்தது 8 புகார் மட்டுமே

தங்கவயலில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி: வந்தது 8 புகார் மட்டுமே

தங்கவயல்: தங்கவயலில் மக்கள் குறை கேட்க, லோக் ஆயுக்தா அதிகாரிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து பொது மக்களுக்கு தகவல் தெரியாமல் போனதால் எட்டு புகார்கள் மட்டுமே அளிக்கப்பட்டன.தங்கவயல் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை, கோலார் மாவட்ட லோக் ஆயுக்தா போலீஸ் எஸ்.பி., தனஞ்செயா, டி.எஸ்.பி., சுதீர், இன்ஸ்பெக்டர் எஸ்வந்த் குமார், ஆகியோர் நேற்று காலை நடத்தினர்.குறிப்பாக ஊழல், முறைகேடு, குறித்து புகார்களை பெறுவதற்காகவே லோக் ஆயுக்தா அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியை நடத்தினர். இக்கூட்டத்தில் தங்கவயல் தாசில்தார் நாகவேணி, நகராட்சி ஆணையர் பவன் குமார் உட்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் பங்கேற்றனர். நகராட்சியில், தாலுகா நிர்வாக அலுவலகத்தில், கல்வித்துறையில், எங்கும் எதிலும் ஊழல் என்று பேசி வருபவர்கள், லோக் ஆயுக்தா அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்க வரவில்லை. வெறும் புகார்கள் மட்டுமே வந்தன.தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர், கோலாரில் உள்ள மாவட்ட லோக் ஆயுக்தா அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிப்பதாகவும் தெரிவித்தனர்.கவுதம் நகர் பகுதியில் உள்ள சிந்து லே அவுட் பகுதியில் கவுடன கெரே ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கோதண்டன் என்பவர் புகார் செய்தார். ஏற்கனவே, தாசில்தாருக்கும் உரிய ஆவணங்களுடன் புகார் செய்திருந்தார். இதன்படி, இம்மாதம் 22ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்திருந்தார் என்பதையும் புகார் அளித்தவர், லோக் ஆயுக்தா அதிகாரிகளிடம் தெரிவித்தார்.இதனை கேட்டறிந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள், 'இம்மாதம் 26க்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

523 ஏக்கர் நிலம்

அரசு நிலம் 523 ஏக்கர் முறைகேடு செய்திருப்பதாக அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்போதைய மக்கள் பிரதிநிதியாக இருந்தவர் தான் முறைகேடுக்கு மூளையாக இருந்தவர். அவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை என்று ஒருவர் புகார் அளித்திருந்தார்.'இப்பிரச்னை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதனால் அது குறித்து நாங்கள் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை' என்றனர்.மனித உரிமைச் சங்கத் தலைவர் எல்.பாபு அளித்த புகாரில், சின்ன கோட்டை, தொட்டூர் கர்ப்பன ஹள்ளி, கட்ட காமதேனஹள்ளி, ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் நில முறைகேடுகளை அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர். அதன் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஆவணங்களை கோலார் மாவட்ட லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நேரில் வந்து வழங்குவதாக தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சி காலை 10:30 மணிக்கு துவங்கி பகல் 1:30 மணி வரை நடந்தது. 'அடுத்த முறை நடக்கும் லோக் ஆயுக்தா கூட்டம் குறித்து பலருக்கும் தெரிவிக்கும் வகையில் பிரசாரம் செய்யப்படும்' என்று லோக் ஆயுக்தாவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை