மேலிடம் உத்தரவிட்டால் ராஜினாமா ராமலிங்க ரெட்டி திட்டவட்டம்
பெங்களூரு: ''கட்சி மேலிடம் உத்தரவிட்டால், இன்றே என் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைந்த போது, இரண்டரை ஆண்டுக்கு பின் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என, கூறப்பட்டது. இப்போது மூத்த எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர் பதவி கேட்கின்றனர். இதில் தவறேதும் இல்லை. ஜனநாயகத்தில் தங்களின் எதிர்பார்ப்பை தெரிவிக்கும் உரிமை, அனைவருக்கும் உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் டில்லிக்கு சென்றிருப்பது, அமைச்சர் பதவி கேட்டு வேண்டுகோள் விடுப்பதற்கு தானே தவிர, முதல்வர் மாற்றம் பற்றி பேசுவதற்காக அல்ல. இவ்விஷயத்தை பற்றி, என்னிடம் கேட்காதீர்கள். கட்சியின் நலனை கருதி, மேலிடம் என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு நான் கட்டுப்படுவேன். அமைச்சர் பதவியை விட்டுத்தரும்படி கூறினால், இன்றே விட்டுத்தருவேன். இவ்வாறு அவர் கூறினார்.