பதவியை ராஜினாமா செய்த நிலையில் தமிழகத்திற்கு சென்ற ராமலிங்க ரெட்டி
பெங்களூரு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ராமலிங்க ரெட்டி தமிழகத்திற்கு சென்று விட்டார். மொபைல் போனை அவர், 'சுவிட்ச் -- ஆப்' செய்ததால், அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகர வளர்ச்சி துறை கிடைக்காத அதிருப்தியில், அமைச்சர் பதவியை ராமலிங்க ரெட்டி நேற்று ராஜினாமா செய்தார். கோரமங்களாவில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அவரது கார் முன் கூடிய ஆதரவாளர்கள், ராஜினாமா முடிவை திரும்ப பெற கோரி போராட்டம் நடத்தினர். கோபம் அடைந்த அவர் ஆதரவாளர்களை திட்டிவிட்டு அங்கிருந்து பயணத்தை தொடர்ந்தார். கர்நாடகா - தமிழகம் எல்லையில் உள்ள அத்திப்பள்ளிக்கு சென்ற அவர், தனியார் ஹோட்டலில் தனது நண்பர்கள், ஆதரவாளர்களுடன், 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். பின், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை நோக்கி பயணம் செய்தார். அங்குள்ள ரிசார்ட்டில் அவர் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு வீட்டில் இருந்தால் கட்சியினர் நேரில் வந்து சமாதானப்படுத்த முயற்சி எடுப்பர் என்று நினைத்த அவர், தளிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவரது மொபைல் போன் சுவிட்ச் - ஆப் செய்யப்பட்டு இருப்பதால், அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''பெங்களூரு நகர வளர்ச்சி துறையை தருவதாக ராமலிங்க ரெட்டிக்கு, நான் வாக்குறுதி கொடுத்தது உண்மை தான். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. கட்சி மேலிடத்திடமும் ராமலிங்கரெட்டிக்கு, பெங்களூரு நகர வளர்ச்சி துறை கொடுக்கும்படி பரிந்துரை செய்தேன். ''ஆனால் கிருஷ்ண பைரே கவுடாவுக்கு கொடுத்து உள்ளனர். ராமலிங்க ரெட்டி தளியில் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. அவரிடம் பேச முயற்சி செய்வேன்,'' என்றார் .