ரவுடி வெட்டி கொலை பெங்களூரில் பயங்கரம்
பேட்ராயனபுரா: வாடகை கார் டிரைவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பெங்களூரு, பேட்ராயனபுரா பாபுஜிநகரில் வசித்தவர் கவுசிக், 25; ரவுடி. இவரது பெயர் பேட்ராயனபுரா போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலிலும் உள்ளது. 2020ல் பேட்ராயனபுராவில் நடந்த கொலையில், கவுசிக் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஜாமினில் வந்தார். பின், வாடகை கார் ஓட்டி பிழைப்பு நடத்தினார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வீட்டின் அருகே கவுசிக் நின்று கொண்டிருந்தார். அங்கு பைக்கில் வந்த நான்கு பேர், கவுசிக்கிடம் தகராறு செய்தனர். அவரை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். பலத்த வெட்டு காயம் அடைந்த கவுசிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவுசிக்கை கொலை செய்தது யார், என்ன காரணம் என்று உடனடியாக தெரியவில்லை. பழிக்கு, பழியாக தீர்த்துக் கட்டப்பட்டாரா என்ற கோணத்தில், பேட்ராயனபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.