அபராதத்தில் தள்ளுபடி ரூ.106 கோடி வசூல்
பெங்களூரு: வாகன போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பான வழக்குகளில் 50 சதவீதம் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டதால், குறுகிய நாட்களில் 106 கோடி ரூபாய் அபராதம் வசூலாகி உள்ளது. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுநர்கள், அதி வேகமாக செல்வது, சிக்னல் ஜம்ப், வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவது, ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட பலவிதமான போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர். பெருமளவில் அபராத தொகை பாக்கியிருந்தது. பெங்களூரில் அதிகமான வழக்குகள் தேங்கின. பாக்கியுள்ள வழக்குகளை முடிக்கும் நோக்கில், அபராதம் செலுத்தினால் 50 சதவீதம் சலுகை அளிக்க, பெங்களூரு போலீசார் முடிவு செய்தனர். இதற்கு அரசும் அனுமதி அளித்தது. ஆகஸ்ட் 23ம் தேதி முதல் செப்டம்பர் 12 வரை தள்ளுபடி சலுகை அளிக்கப்பட்டது. வாகன உரிமையாளர்கள் சலுகையை பயன்படுத்தி, தாங்களாகவே முன்வந்து அபராதம் செலுத்தினர். நேற்று முன் தினம் சலுகை முடிவடைந்தது. இதுவரை 37,86,173 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் முடிக்கப்பட்டன. 106 கோடி ரூபாய் அபராத பாக்கி வசூலானது. இறுதி நாளான நேற்று முன் தினம் ஒரே நாளில், 25 கோடி ரூபாய் அபராதம் வசூலானது.