உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அமைச்சர் பிரியங்க் கார்கேயின் சொந்த ஊர் சித்தாபூரில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் வெற்றி

 அமைச்சர் பிரியங்க் கார்கேயின் சொந்த ஊர் சித்தாபூரில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் வெற்றி

கலபுரகி: அமைச்சர் பிரியங்க் கார்கேயின் சொந்த ஊரான, சித்தாபூரில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நேற்று வெற்றிகரமாக நடந்தது. கர்நாடகாவில் அரசு, பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று, முதல்வர் சித்தராமையாவுக்கு கடந்த மாதம் பிரியங்க் கார்கே கடிதம் எழுதினார். இதனால் தங்கள் சக்தியை வெளிகாட்டும் வகையில், அவரது சொந்த ஊரான கலபுரகி சித்தாபூரில், கடந்த மாதம் 19 ம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்தது. ஆனால் பிரியங்க் கார்கேயின் துாண்டுதலின்பேரில் சில அமைப்புகளும், கடந்த மாதம் 19ம் தேதி ஊர்வலம் நடத்த தாசில்தாரிடம் அனுமதி கேட்டன. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்கப் படவில்லை. ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க கோரி, ஆர்.எஸ்.எஸ்., சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணையின் போது, ஊர்வலம் நடத்த அனுமதி கேட்ட அமைப்புகளுடன் பேச்சு நடத்த நீதிபதி உத்தரவிட்டார். அமைதி கூட்டம் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்த அரசு வக்கீல், சித்தாபூரில் நவம்பர் 16 ல் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்த அனுமதி கொடுக்கிறோம். ஆனால் 300 பேர் மட்டுமே ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும் என்று தகவல் தெரிவித்தார். இதற்கு ஐகோர்ட்டும் அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று மாலை 3:30 மணிக்கு சித்தாபூரில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் துவங்கியது. அரசு தெரிவித்தபடி 300 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. ஊர்வலத்தில் பங்கேற்க உள்ளவர்கள் பெயர் பட்டியலை சரிபார்த்து, போலீசார் ஊர்வலத்திற்கு அனுப்பினர். மற்றவர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். ஊர்வலத்திற்கு முன்பு சில வாலிபர்கள் கூடி நின்றனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். 'பாரத் மாதா கீ ஜே', 'வந்தே மாதரம்' கோஷத்துடன் நகரின் முக்கிய வீதிகளில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் வெற்றிகரமாக ஊர்வலம் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ