தேர்தலில் தியாகங்கள்: பா.ஜ., தலைவர் அறிவுரை
பெங்களூரு: ''தேர்தல் என்றாலே சில தியாகங்களை செய்துதான் ஆக வேண்டும்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அறிவுறுத்தி உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: மாநிலத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், கட்சி மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் ம.ஜ.த.,வுடன் கூட்டணியிட்டு போட்டியிடவே கட்சியின் தேசிய தலைவர்கள் விரும்புகின்றனர். கட்சி மேலிடம் சொல்வதை பஞ்சாயத்து தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டும். மாநிலத் தலைவராக இருந்தாலும் மேலிட தலைவர்கள் சொல்வதை பின்பற்றிதான் ஆக வேண்டும். இந்த தேர்தலில், காங்கிரசை வீழ்த்துவதே லட்சியமாக இருக்க வேண்டும். இது குறித்து மத்திய அமைச்சர் குமாரசாமியிடம் பேச உள்ளேன். நடக்கவுள்ள எம்.எல்.சி., தேர்தலுக்கான வியூகம் வகுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில், பழைய மைசூரு, கல்யாண கர்நாடகா, ஹாசன் பகுதிகளில் கட்சியை வளர்க்க தொண்டர்கள் பாடுபட வேண்டும். தேர்தல் என்றாலே சில தியாகங்களை செய்துதான் ஆக வேண்டும். தர்மத்தை கடைப்பிடித்து நடக்க வேண்டும். ஒவ்வொரு தொண்டரும் கடுமையாக உழைக்க வேண்டும். பஞ்சாயத்து தலைவர்கள், நகர தலைவர்கள் தொண்டர்களை சரியாக வழிநடத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.