மேலும் செய்திகள்
கரூரில் நாளை சர்வதேச செஸ் போட்டி
10-Feb-2026
அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப்
26-Feb-2026
மத்திய அரசின் விளையாட்டு துறை சார்பில், தபால் துறையில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக, பாரா சதுரங்க போட்டி சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் நகரில் கடந்த மாதம் 27, 28ம் தேதிகளில் நடந்தது. கடந்த 1ம் தேதி நடந்த இறுதி போட்டியில், பெங்களூரு மண்டல விளையாட்டு கவுன்சில் அணி சார்பில், உத்தர கன்னடா மாவட்டம் ஹொன்னாவர் தபால் நிலையத்தில் அஞ்சல் உதவியாளராக பணியாற்றும் சமர்த் ராவ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட, உத்தர பிரதேசத்தின் ஜெயினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். உடுப்பி மாவட்டம் குந்தாபூர் பஸ்ரூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் - வினுதா பட் தம்பதியின் மகனான சமர்த் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர். அவரது உடலில், 75 சதவீதம் குறைபாடுகள் இருந்தாலும், சதுரங்க போட்டியில் அவருக்கு அதீத ஆர்வம். நான்கு மாத குழந்தையாக இருந்த போதே நிமோனியாவால் பாதிக்கப்பட்ட சமர்த், பல நாட்கள் சிகிச்சைக்கு பின், 32 ஊசிகள் போடப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். நான்கு வயதாக இருந்த போது இடது கையில் எழுத ஆரம்பித்த அவரிடம், வருட காலண்டரை கொடுத்து, 10 நிமிடங்கள் முழுமையாக பார்க்க வைத்த பின், காலண்டரில் உள்ளது பற்றி கேள்வி கேட்டால் சரியாக சொல்லி விடுவார். அதாவது எந்த நாளில் அரசு விடுமுறை என்பது உள்ளிட்ட தகவல்களை கூறுவார். பள்ளியில் படிக்கும் போது, சமர்த்துடன் யாரும் பேசுவதில்லை. அவருக்கு என்று நண்பர்கள் வட்டத்தை உருவாக்க வீட்டில் சதுரங்கம், கேரம் போர்டுகளை பெற்றோர் வாங்கி வைத்தனர். இதன் மூலம் சமர்த்துக்கு நண்பர்கள் கிடைத்தனர். சதுரங்கம் விளையாடுவதில் சமர்த்து ஆர்வம் காட்டினார். பள்ளியில் படித்த போது நடந்த போட்டிகளிலும், சதுரங்கத்தில் நிறைய பதக்கம் வென்று உள்ளார். தேசிய அளவில் நடந்த போட்டியிலும் பல பதக்கம் வென்று அசத்தி உள்ளார். ஐந்து முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தை, தன் முன்மாதிரியாக வைத்துள்ள சமர்த், அவரை போன்று ஒரு நாள் வர வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து உள்ளார். - நமது நிருபர் -
10-Feb-2026
26-Feb-2026