பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு நடப்பாண்டு 4 லட்சம் பேர் குறைவு
பெங்களூரு: கர்நாடகாவில் அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிட்டால், 4 லட்சம் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது குறித்து, கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை: நடப்பு 2026 - 27ம் கல்வியாண்டின், மாணவர் சேர்க்கை ஜூலை 31ம் தேதி முடிந்தது. புள்ளி விபரங்களின்படி, கர்நாடகா முழுதும் 96 லட்சம் மாணவர்கள், முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டு இந்த எண்ணிக்கை, ஒரு கோடியாக இருந்தது. இம்முறை நான்கு லட்சம் குறைந்துள்ளது. அரசு பள்ளிகளில் ஒரு லட்சம், அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளில், மூன்று லட்சம் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறைந்தாலும், அரசு உயர் நிலைப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, ஆறுதலான விஷயமாகும். ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைய, குழந்தைகள் பிறப்பு குறைந்திருப்பதே காரணம் என, கல்வி வல்லுனர்கள், பள்ளி நிர்வாகிகள் கூறியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.