ஜி.பி.ஆர்., இயந்திரம் மூலம் இன்று முதல் தேடுதல் வேட்டை
மங்களூரு : தர்மஸ்தலாவில் மண்ணுக்குள் எலும்புக்கூடு உள்ளதா என கண்டறிய, ஜி.பி.ஆர்., இயந்திரம் மூலம் இன்று முதல் தேடுதல் வேட்டை நடக்க உள்ளது. தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்தது குறித்து எஸ்.ஐ.டி., விசாரிக்கிறது. புகார்தாரர் அடையாளம் காட்டியதில் 13 இடங்களை 'மார்க்கிங்' செய்தனர். இதில் 13 இடத்தை தவிர மற்ற 12 இடங்கள் தோண்டப்பட்டன. இவற்றில் இரண்டு இடங்களிலும் மட்டுமே எலும்புக் கூடுகள் கிடைத்தன. மார்க்கிங் செய்த இடத்தை தவிர, மேலும் நான்கு இடத்திலும் பள்ளம் தோண்டப்பட்டது. அங்கும் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 13வது இடத்தை தோண்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது அந்த இடத்தின் அருகே தடுப்பணை, நிறைய டிரான்ஸ்பர்மர்கள் உள்ளன. அங்கு ஏதாவது பள்ளம் தோண்டினால், தடுப்பணைக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மாற்று வழியை எஸ்.ஐ.டி., அதிகாரிகள் தேடினர். புகார்தாரர் தரப்பு வக்கீல்கள், பள்ளம் தோண்டுவதற்கு பதிலாக ஜி.பி.ஆர்., இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மறு விசாரணை ஜி.பி.ஆர்., இயந்திரம் பூமிக்கு அடியில் என்ன உள்ளது என்பதை, துல்லியமாக புகைப்படம் எடுக்கக் கூடியது. மூன்று நாட்களுக்கு முன்பே அந்த இயந்திரம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது. ஒரு வழியாக நேற்று மாலை தான் வந்தது. அந்த இயந்திரத்தை ட்ரோனில் பொருத்தி நேற்று பரிசோதித்து பார்த்தனர். மேலும், 13வது இடத்தில் நிறைய புதர்கள் இருப்பதால், அதை வெட்டி அகற்றும்படி, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி தர்மஸ்தலா கிராம பஞ்சாயத்து ஊழியர்கள், புதர்களை அகற்றினர். இன்று முதல் ஜி.பி.ஆர்., இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில், 1986ம் ஆண்டு தர்மஸ்தலாவில் மர்மமான முறையில் இறந்த கல்லுாரி மாணவி பத்மலதாவின் சகோதரி இந்திராவதி நேற்று எஸ்.ஐ.டி., அதிகாரிகளை சந்தித்தார். தனது சகோதரியின் மரணம் குறித்து மறு விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தார்.
மோடி தலையிட கோரிக்கை
மங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜனார்த்தன பூஜாரி பேசியதாவது: தர்மஸ்தலா பகுதியில் விசாரணை என்ற பெயரில் பள்ளம் தோண்டப்படுகிறது. மத்திய அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் என்ன செய்கின்றனர்? தர்மஸ்தலாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. முதல்வர் சித்தராமையாவை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். நீங்கள் என்னை சிறையில் அடைத்தாலும், தர்மஸ்தலா பெயருக்கு களங்கம் ஏற்பட விடமாட்டேன். முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தின் இறந்தால் அவர்களின் உடல்கள் மசூதிகள், தேவாலய பகுதியில் புதைக்கப்படுகின்றன. அதுபோல தர்மஸ்தலாவில் இறந்தவர்கள் உடல்களும் அப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் கலாசாரம். எஸ்.ஐ.டி., குழுவினர் உடல்களை தேடுகின்றனர். எதுவும் கிடைக்காது. கோவிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டேயுடன் நாங்கள் இருப்போம். மோடி தர்மஸ்தலாவுக்கு சென்று உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.