இரண்டு மாதத்தில் 2வது முறை விஜயபுராவில் திடீர் நிலநடுக்கம்
விஜயபுரா: இரண்டு மாதங்களில், இரண்டாவது முறையாக, விஜயபுராவில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநில எல்லையில், விஜயபுரா மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நிலநடுக்கம் அடிக்கடி நடக்கிறது. நேற்று காலை 11:26 மணிக்கு, டிக்கோட்டா தாலுகாவில் உள்ள கோனசாகி, கல்லவதாகி, பாபாநகர், பிஜ்ஜரகி, சோமதேவரட்டி, மலகனதேவரட்டி ஆகிய கிராமங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு நிமிடம் நீடித்த நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக குலுங்கின. பாத்திரங்கள் விழுந்து உருண்டன. அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்பு குழுவினர் கிராமங்களுக்கு சென்று, மக்களிடம் தகவல் பெற்றனர். பயங்கர வெடி சத்தம் போன்ற உணர்வை ஏற்பட்டதாக மக்கள் கூறினர். ஆய்வு நடத்தியதில், 4.9 ரிக்டர் அளவில் அதாவது லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது தெரிந்தது. யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அதிகாரிகள் தைரியம் கூறி விட்டு சென்றனர். கடந்த மாதமும் டிகோட்டா தாலுகாவில் சில கிராமங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டே மாதத்தில், இரண்டாவது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம், டிக்கோட்டா தாலுகா மக்களை பீதி அடைய செய்துள்ளது.