உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வை நோக்கி செருப்பு வீச்சு: 6 ம.ஜ.த.,வினர் கைது 

 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வை நோக்கி செருப்பு வீச்சு: 6 ம.ஜ.த.,வினர் கைது 

சிக்கபல்லாபூர்: காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வரை நோக்கி, செருப்பு வீசிய, ம.ஜ.த., தொண்டர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமியின் சொத்து மதிப்பு, அவர் கையில் அணியும் கைக்கடிகாரங்கள் குறித்து, சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் சமீபத்தில் விமர்சித்து பேசினார். இந்நிலையில், சிக்கபல்லாபூரில் நேற்று முன்தினம் நடந்த கெம்பே கவுடா ஜெயந்தியில் பங்கேற்க வந்த பிரதீப் ஈஸ்வருக்கு எதிராக, ம.ஜ.த., தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து வெளியே வந்த அவர், தனது காரில் ஏறினார். காரின், 'சன் ரூப்'பை திறந்து விட்டு, மீசையை முறுக்கி, தோளில் தட்டி, ம.ஜ.த.,வினருக்கு எதிராக சவால் விடுத்தார். அப்போது சிலர், எம்.எல்.ஏ.,வை நோக்கி செருப்பு வீசினர். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்று விட்டார். செருப்பு வீச்சு சம்பவம் குறித்து, எம்.எல்.ஏ., தரப்பு அளித்த புகாரில், சிக்கபல்லாபூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், ம.ஜ.த., தொண்டர்கள் ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதற்கு குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதே நேரம், எம்.எல்.ஏ.,வை அவமதிக்கும் செயலில், நமது கட்சி தொண்டர்கள் ஈடுபட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தன்னை நோக்கி செருப்பு வீசப்பட்டதற்கு, பிரதீப் ஈஸ்வரும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை அவமதிக்கின்றனர்' என்றார். 'அரசியல் விவகாரத்தில் ஜாதியை நுழைக்க வேண்டாம்' என, பிரதீப் ஈஸ்வருக்கு, பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !