கோவில்களில் படப்பிடிப்பு ரூ.71 லட்சம் வருமானம்
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள கோவில்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த படப்பிடிப்பு மூலம் 71 லட்சம் ரூபாய் ஹிந்து அறநிலையத்துறைக்கு வருமானம் கிடைத்து உள்ளது. கர்நாடகாவில் பல பழமையான கோவில்கள் உள்ளன. மைசூரு, மாண்டியா, பெங்களூரு, ஹம்பி என பல பகுதிகள் ஆன்மிக சுற்றுலாவுக்கு பெயர் பெற்றன. இங்குள்ள கோவில்களில் சமீப காலமாக படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கோவில்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஹிந்து அறநிலையத்துறையிடம் முன்அனுமதி பெற வேண்டும். அதுபோல, குறிப்பிட்ட கோவில்களில் மட்டுமே படப்பிடிப்புக்கு அனுமதி. கோவில்களுக்கு தகுந்தவாறு கட்டணமும் செலுத்த வேண்டும். அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு கடந்த 3 ஆண்டுகளில் திரைப்படம், டி.வி., சீரியல் என பல படப்பிடிப்புகள் நடந்து உள்ளன. இதன் மூலம் அறநிலையத்துறைக்கும் வருவாய் கிடைத்து உள்ளது. இது குறித்து, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கன்னடா தவிர தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் எடுக்கப்படும் படங்களுக்கும் கோவில்களில் படப்பிடிப்புகள் நடந்தன. கோவில்களில் படப்பிடிப்பு நடத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் சினிமா மூலம் 54 லட்சம் ரூபாயும்; டி.வி., சீரியல் மூலம் 17 லட்சம் ரூபாய் என மொத்தம் 71 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. மாண்டியா செலுவநாராயண சுவாமி கோவிலில் அதிக படப்பிடிப்புகள் நடந்தன. இவ்வாறு அவர்கள் கூறினர்.