ரவுடியிடம் ரூ.70,000 லஞ்சம் எஸ்.ஐ., - ஏ.எஸ்.ஐ., கைது
சிக்கபல்லாபூர்: ரவுடியின் பெயரை, ரவுடி பட்டியலில் சேர்க்காமல் இருப்பதற்காக, அவரிடம், 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறும் போது, சிக்கபல்லாபூர் எஸ்.ஐ.,, உதவி எஸ்.ஐ.,யை லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர். சிக்கபல்லாபூரில் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தவர் ராகவேந்திரா. இவரின் பெயரை ரவுடிகளின் பட்டியலில் சேர்ப்பதாக, சிக்கபல்லாபூர் ரூரல் போலீஸ் நிலைய இன்பெக்டர் சரணப்பா, உதவி எஸ்.ஐ., வெங்கடேஷ் ஆகியோர் மிரட்டினர். ஆரம்பத்தில் அதிக தொகை கேட்டு, இறுதியில், 70 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்புக் கொண்டனர். ஆனாலும், இத்தகையவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்த ராகவேந்திரா, லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். அவர்களின் வழிகாட்டுதல்படி, நேற்று குறிப்பிட்ட இடத்தில் இருவரிடமும் 70 ஆயிரம் ரூபாய் வழங்கினார். அப்போது அங்கிருந்த லோக் ஆயுக்தா போலீசார், இருவரையும் கையும், களவுமாக கைது செய்தனர்.