எஸ்.பி., ஆபீஸ் இடமாற்றம்? நடக்காது என்கிறார் ரூபகலா
தங்கவயல்: ''தங்கவயலில் இருந்து எஸ்.பி., அலுவலகத்தை இடமாற்றம் செய்ய விட மாட்டேன்,'' என, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார். தங்கவயல் கிராம பகுதிகளில் சுத்திகரிப்பு செய்த குடிநீர் வழங்கும் 'ஆர்.ஓ., பிளான்ட்'களை திறந்து வைத்த பின், அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. தங்கவயல் எஸ்.பி., அலுவலகம் இடமாற்றம் செய்யும் விஷயத்தில் எனது கவனத்திற்கு கொண்டு வராமல், எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருக்கும் வரை, எஸ்.பி., அலுவலகத்தை இங்கிருந்து இடமாற்றம் செய்ய அனுமதிக்க மாட்டேன். இது போன்று அரசின் எந்த ஓர் அலுவலகத்தையும் இடமாற்றம் செய்ய விடமாட்டேன். இத்தொகுதிக்கு மேலும் பல அரசு அலுவலகங்கள் வருவதற்கு முயற்சி எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார். ஹுல்கூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட வெங்கடாபுரம், ராமசாகர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட வட்டரஹள்ளி, சர்வரெட்டிஹள்ளி, பூடதிமிட்டே கங்காண்ட்லஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கண்ணுார் ஆகிய கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை அவர் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ''தங்கவயல் தொகுதி முழுதும் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ''இதற்காக சமூக நலத்துறையின் சிறப்பு நிதி மூலம் கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பொறுப்பாக பராமரிக்க வேண்டும். அதிலுள்ள இயந்திரங்கள் மற்றும் நீர் சேமிப்பு தொட்டிகள் அவ்வப்போது முறையாக சுத்தம் செய்யப்பட வேண்டும்,'' என, அதிகாரிகளிடம் அவர் கூறினார்.