பாதுகாப்பை பலப்படுத்த விதான் சவுதாவில் ஏ.ஐ., கேமரா வீடு போன்று அழகுபடுத்துவதாக சபாநாயகர் காதர் பேட்டி
பெங்களூரு: பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், விதான் சவுதாவில் ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், வீடு போன்று விதான் சவுதாவை பார்த்து, பார்த்து அழகுபடுத்துவதாகவும் சபாநாயகர் காதர் கூறினார். விதான் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி: நான் சபாநாயகர் ஆனதும் என்னை சந்திக்க வந்த ஒருவர், விதான் சவுதாவின் அழகை மேம்படுத்த நீங்கள் நடவடிக்கை எடுக்கலாமே என்று என்னிடம் கூறினார். பா.ஜ., ஆட்சியின் போது சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் காட்ட, ஒரு டிவி சேனலுக்கு 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நான் அதனை ரத்து செய்து, அந்த பணத்தை விதான் சவுதாவின் அழகை மேம்படுத்த பயன்படுத்தி வருகிறேன். தற்போது கெங்கல் ஹனுமந்தய்யா சிலை அருகில் உள்ள கிழக்கு திசை பகுதியில், புதிய கதவு அமைக்கும் பணிகள் நடக்கிறது. வண்ண விளக்கு சுதந்திர தினம், குடியரசு தினத்தின் போது விதான் சவுதா கட்டடம் மீது, வண்ண விளக்குகளை ஒளிர விடும் பணியை, தனியார் நிறுவனம் செய்தது. இதற்காக ஒரு நாளைக்கு மூன்று லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்தனர். நான் சபாநாயகர் ஆனதும், வண்ண விளக்குகள் ஒளிர விடும் பணியை, அரசே எடுத்து நடத்த உத்தரவிட்டேன். பெலகாவி சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும் போதும், தற்போது வண்ண விளக்குகள் ஒளிர விடப்படுகின்றன. விதான் சவுதாவின் முதல் தளம் மட்டும் எனது கட்டுப்பாட்டில் வருகிறது. மற்ற 3 தளங்களையும் பொதுப்பணித் துறை நிர்வகிக்கிறது. முதல் தளத்தில் என்னென்ன புதுமையாக செய்ய முடியுமோ, அனைத்தையும் முயற்சித்து வருகிறேன். எனது கடமை வீட்டை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்போம். வீடு போன்று விதான் சவுதாவை பார்த்து, பார்த்து அழகுபடுத்துகிறேன். முதல் தளத்தில் நடக்கும் மாற்றங்களை பார்த்து, மற்ற மூன்று தளங்களிலும் மாற்றங்களை கொண்டு வர, பொதுப்பணி துறை பரிசீலித்து வருகிறது. தற்போது எம்.எல்.ஏ.,க்கள் வருகையை பதிவு செய்வதற்காக, சட்டசபைக்குள் மட்டும் ஏ.ஐ., கேமராவை பயன்படுத்துகிறோம். வரும் நாட்களில் விதான் சவுதா பாதுகாப்பை பலப்படுத்த, அனைத்து இடங்களிலும் ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்படும். விதான் சவுதா வளாகம் பாரம்பரியமானது. கன்னடர்களின் பெருமையாக உள்ளது. இதை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருப்பது சபாநாயகரான எனது கடமை. எதிர்காலத்தில் விதான் சவுதாவின் வடிவத்தை மாற்ற என்னிடம் நிறைய திட்டம் உள்ளது. எனது திட்டங்கள் பற்றி அரசிடமும் கூறி உள்ளேன். புதிய வடிவு கடந்த ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை, விதான் சவுதா வளாகத்தில் புத்தக திருவிழா நடத்தினோம். இதற்காக சபாநாயகர் அலுவலகம் சார்பில், 4 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆண்டுதோறும் புத்தக திருவிழா நடத்த நாங்கள் அனுமதி கொடுக்கிறோம். கன்னட கலாசார துறை முன்வர வேண்டும். தமிழகம் உட்பட சில மாநிலங்களில், காகிதமில்லா சட்டசபை நடக்கிறது. நாங்களும் காகிதமில்லா சட்டசபையை, வரும் கூட்டத்தொடர்களில் நடத்துவோம். இவ்வாறு கூறினார்.
கம்பாலா தீர்ப்புக்கு வரவேற்பு
இது குறித்து சபாநாயகர் காதர் கூறியதாவது: கம்பாலா போட்டிகளை மாநிலம் முழுதும் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்த தீர்ப்பை வரவேற்கிறேன். ஆண்டில் 365 நாட்களில் 25 நாட்கள் மட்டுமே கடலோர பகுதிகளில் கம்பாலா போட்டிகள் நடக்கிறது. போட்டியின் போது எருதுகளை துன்புறுத்துவதாக, சிலர் குற்றச்சாட்டு சொல்கின்றனர். போட்டி நேரத்தில் எருதுகளை அதன் உரிமையாளர்கள் அடிக்கலாம். ஆனால் மற்ற அனைத்து நாட்களும் தனது மகன்களை போன்று பாவிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.