உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆற்றில் மிதந்த ஆதார் கார்டுகள் விசாரணை நடத்த சபாநாயகர் உத்தரவு

 ஆற்றில் மிதந்த ஆதார் கார்டுகள் விசாரணை நடத்த சபாநாயகர் உத்தரவு

பெங்களூரு: மங்களூரு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புதுகிராமத்தில், பரங்கிபேட் என்ற இடத்தில், ஆயிரக்கணக்கான ஆதார் கார்டுகள் வீசப்பட்டுள்ளன. தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான சபாநாயகர் காதர், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வால் தாலுகா, மங்களூரு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புது கிராமம். இக்கிராமத்தின் பரங்கிபேட் என்ற இடத்தில், நேத்ராவதி ஆற்றில் ஆயிரக்கணக்கான ஆதார் கார்டுகள் நேற்று முன்தினம் மாலை மிதந்து வந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், ஆதார் கார்டுகளை நீரில் இருந்து எடுத்து, ஒரு இடத்தில் குவித்து வைத்து, போலீசார், தொகுதி எம்.எல்.ஏ.,வான சபாநாயகர் காதருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், ஆதார் கார்டுகளை கைப்பற்றி கொண்டு சென்றனர். இவைகள் ஆற்றங்கரைக்கு எப்படி வந்தன என்பது தெரியவில்லை. இதுகுறித்து, விசாரணை நடத்தி கண்டுபிடிக்கும்படி, போலீசாருக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். ஆதார் கார்டுகள் விழுந்து கிடந்தது குறித்து, ஆதார் கார்டு ஆணையத்துக்கும், சபாநாயகர் கடிதம் எழுதியுள்ளார். உரியவர்களிடம் சேர்ப்பதற்காக தபாலில் அனுப்பப்பட்ட ஆதார் கார்டுகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவற்றில் நேத்ராவதி ஆற்றின் சுற்றுப்பகுதி கிராம மக்களின் போட்டோ, முகவரிகள் உள்ளன. ஆதார் கார்டு வரவில்லை என, மக்கள் காத்திருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான கார்டுகள் ஆற்றில் மிதந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. கிராம பஞ்சாயத்து தலைவர் ரம்லான் மாரிபள்ளா கூறியதாவது: கிராமத்தினருக்கு ஆதார் கார்டு கிடைக்கவில்லை. பலரும் சைபர் சென்டர்களில் பணம் கொடுத்து ஆதார் கார்டு பெறுகின்றனர். ஆனால், ஆயிரக்கணக்கான ஆதார் கார்டுகள் ஆற்றில் வந்தது எப்படி. இது, கவனிக்க வேண்டிய விஷயமாகும். இதன் பின்னணியில் இருப்பது யார் என்று விசாரிக்க வேண்டும். இதுகுறித்து, கிராம பஞ்சாயத்து சார்பில், தொகுதி எம்.எல்.ஏ.,விடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், கிராமத்தினருடன் சேர்ந்து, தபால் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார். ....புல் அவுட்..... ஆற்றில் ஆதார் கார்டுகள் காணப்பட்டது குறித்து, எங்கள் கவனத்துக்கும் வந்தது. தபால் அலுவலக அதிகாரிகள், அங்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிப்பர். அதன்பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். - தினேஷ், தபால் அலுவலக ஊழியர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை