உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எஸ்.எஸ்.எல்.சி., கன்னட பாடத்தில் தோல்வி அதிகரிப்பு மும்மொழி கல்விக் கொள்கைக்கு கே.டி.ஏ., எதிர்ப்பு

 எஸ்.எஸ்.எல்.சி., கன்னட பாடத்தில் தோல்வி அதிகரிப்பு மும்மொழி கல்விக் கொள்கைக்கு கே.டி.ஏ., எதிர்ப்பு

பெங்களூரு: 'கன்னடக் கற்றலை வலுப்படுத்தவும், தேவையற்ற மூன்றாவது மொழியின் சுமையைக் குறைக்கவும், தற்போதைய மும்மொழி முறையைக் கைவிட்டு இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்' என, கே.டி.ஏ., எனும் கன்னட மேம்பாட்டு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தாய்மொழியான கன்னடப் பாடத்தில் மாணவர்கள் தோல்வி அடைவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கே.டி.ஏ., ஆய்வு செய்தது. இந்தக் குழுவில், கல்வியாளர் வி.பி. நிரஞ்சனராத்யா தலைமையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கன்னட ஆசிரியர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆய்வறிக்கை மாணவர்களின் தாய்மொழிக் கல்வி குறித்து இந்தக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 'கர்நாடகக் குழந்தைகள் ஏன் கன்னடப் பாடத்தில் தோல்வி அடைகின்றனர்' என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை குழுவினர் தயாரித்தனர். இந்த அறிக்கையை மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைக்கு ஆணையம் சமீபத்தில் சமர்ப்பித்தது. அறிக்கையில் குழு கூறியிருப்பதாவது: கடந்த 2016 மற்றும் 2025ம் ஆண்டுகளுக்கும் இடையில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில் கன்னடப் பாடத்தில் தோல்வியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 2 முதல் 3 சதவீதம் அதிகரித்துள்ளது. கன்னடத்தை முதல் மொழியாகக் கற்கும் மாணவர்களின் தோல்வி எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 9.6 சதவீதத்திலிருந்து 12.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. தோல்வி எண்ணிக்கை கடந்த ஆண்டில், கன்னடத்தை இரண்டாம் மொழியாகக் கற்கும் மாணவர்களின் தோல்வி எண்ணிக்கை 3.3 சதவீதம் உயர்ந்து, 11.7 சதவீதம் என்ற அளவில் இருந்தது. கன்னடத்தை மூன்றாம் மொழியாகக் கற்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், இந்தக் காலகட்டத்தில் 88.1 சதவீதத்திலிருந்து 87.8 சதவீதமாகக் குறைந்தது. கடந்த 10 ஆண்டுகளில், கன்னடத்தை மூன்றாவது மொழியாகத் தேர்ந்தெடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 68 சதவீதம் குறைந்தது. அதே சமயம் அதை இரண்டாவது மொழியாகத் தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கன்னடத்தை முதல் மொழியாகத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் 2016ல் 83.1 சதவீதத்திலிருந்து 2025ல் 81 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில், ஆங்கிலத்தை முதல் மொழியாகத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 10.6 சதவீதத்திலிருந்து 14.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. சமூக பிரிவுகள் மற்றும் மாவட்டங்களைப் பொறுத்தும் தோல்வி சதவீதம் மாறுபட்டது. பட்டியல் பழங்குடியினர், பட்டியல் ஜாதியினர், 2பி பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தோல்வி அடைந்துள்ளனர். வட கர்நாடகா மாவட்டங்களில் மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். கடலோர மற்றும் மலநாடு பகுதிகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் உள்ளது. முன்னுரிமை கன்னடத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, அடுத்தகட்ட கல்விக்கான தேர்வில் முன்னுரிமை மற்றும் அரசு வேலைகளில் முன்னுரிமை உள்ளிட்ட சலுகைகளை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னடக் கற்றலை வலுப்படுத்தவும், தேவையற்ற மூன்றாவது மொழியின் சுமையைக் குறைக்கவும், தற்போதைய மும்மொழி முறையைக் கைவிட்டு, இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தோல்விக்குக் காரணம்

 சமூக மற்றும் பொருளாதார காரணிகள்  மொழி கற்பித்தல் உள்கட்டமைப்பின் தரம்  மொழி ஆசிரியர் பற்றாக்குறை  நீண்டகாலமாக முடங்கிக் கிடப்பது

அரசுக்குப் பரிந்துரை

 மொழித்திறனை மேம்படுத்தும் பாடங்கள்  எளிய கதைகள், கவிதைகள், உரையாடல்  எழுதுதல், வாசித்தல் பயிற்சி  திறமை வெளிப்படுத்துதல் பயிற்சி  மாணவர்களை கவரும் படங்கள்  ஈர்க்கக்கூடிய கற்றல் பொருட்கள்  மொழிகற்கும் திறனுக்கு முன்னுரிமை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி