கோவிலில் ஷூட்டிங் நடத்த கடும் எதிர்ப்பு
சாம்ராஜ் நகர்: பண்டிப்பூர் புலிகள் சரணாலயம் உள்ள, ஹிமவத் கோபால சுவாமி மலைக் கோவில் வளாகத்தில், மலையாள திரைப்பட சூட்டிங் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவில், பண்டிப்பூர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்தியாவில் பிரசித்தி பெற்ற புலிகள் சரணாலயத்தில், பண்டிப்பூரும் ஒன்று.பண்டிப்பூர் வனப்பகுதியில் ஹிமவத் கோபாலசுவாமி மலை உள்ளது. இது வரலாற்று பிரசித்தி பெற்ற ஆன்மிக தலம் மற்றும் சுற்றுலா தலமாக விளங்குகிறது.தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஹிமவத் கோபாலசுவாமி கோவில் உள்ளதால், 2016ல் இங்கு தனியார் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.மலை அடிவாரத்தில் வனத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, அரசு பஸ்சில் மலைக்கு செல்ல வேண்டும். இதுவரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது இல்லை.இந்நிலையில் ஹிமவத் கோபாலசுவாமி மலையில், மலையாள படப்பிடிப்புக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். நேற்று முன்தினம் முழுதும், கோவில் படிகளிலேயே பல காட்சிகள் படமாக்கப்பட்டன. அதிகமான வாகனங்கள் வந்தன. பெரிய கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.தடை செய்யப்பட்ட வனப்பகுதியில், குறிப்பாக முக்கியமான திருத்தலத்தில், படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்ததை, அப்பகுதியினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டித்துள்ளனர்.இயற்கை காட்சிகள் நிறைந்த, அபூர்வமான தாவரங்கள் உள்ள, புலிகள் சரணாலயத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தது சரியல்ல என, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.'குண்டுலுபேட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கணேஷ் பிரதாத், மாநில வனவிலங்கு வாரியத்தில் உறுப்பினராக இருக்கிறார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்பது அரசுக்கும், எம்.எல்.ஏ.,வுக்கும் தெரியாதா? வனப்பகுதியில் எங்களின் பசுக்கள் மேய சென்றால், அனுமதி அளிப்பதில்லை.'எங்கள் மீதே வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்த உதாரணங்களும் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் படப்பிடிப்புக்கு, அரசு அனுமதி அளித்தது ஏன்? இங்கு படப்பிடிப்புக்கு வாய்ப்பளித்து, வருவாயை பெருக்க வேண்டிய அவசியம் என்ன?' என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.பண்டிப்பூர் வனப்பகுதியில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட விஷயத்தில், கர்நாடகா மற்றும் கேரளா இடையே, பல ஆண்டுகளாக, பனிப்போர் நடக்கிறது.கேரளாவின், வயநாடு காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா, பண்டிப்பூரில் இரவு நேர போக்குவரத்து மீதான தடையை தளர்த்தும்படி, கர்நாடக அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறார். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பாலும், வன விலங்குகளின் நலனை கருத்தில் கொண்டும், இரவு நேர போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க கர்நாடக அரசு தயங்குகிறது.ஆனால் பிரியங்கா, காங்., தேசிய முதன்மை செயலர் வேணுகோபால் உட்பட பலரும் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.இத்தகைய சூழ்நிலையில், பண்டிப்பூர் வனப்பகுதிக்கு உட்பட்ட, ஹிமவத் கோபால சுவாமி மலையில் மலையாள படப்பிடிப்புக்கு அனுமதி அளித்திருப்பது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.வனத்துறை அதிகாரி பிரபாகர் கூறுகையில், “மலையாள படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது நாங்கள் அல்ல. மாநில அரசே அனுமதி அளித்துள்ளது. எங்களுக்கு உத்தரவு பிரதி வந்துள்ளது. படப்பிடிப்புக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்,” என்றார்.