உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வாந்தியால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

 வாந்தியால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

ஷிவமொக்கா: உணவு ஒவ்வாமையால், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளி தாலுகாகோனந்துாரில் தனியார் உறைவிட பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் இரவு சப்பாத்தி, பருப்பு குழம்பு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால், 50க்கும் மேற்பட்டமாணவர்கள் தீர்த்தனஹள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட, 11மாணவர்கள் நேற்று காலை மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 'துாய்மையின்றி உணவு தயாரிக்கப்பட்டதே மாணவர்கள் பாதிக்கப்பட்டதற்கு காரணம்' என பள்ளி நிர்வாகம்மீது, மாணவர்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதையடுத்து, நேற்று மதியம் மாவட்ட சுகாதார, குடும்ப நல அலுவலர் நடராஜ் பள்ளி சமையற்கூடத்தை ஆய்வு செய்தார். உணவு, நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதிகாரி நடராஜ் கூறியதாவது: உணவு பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மாணவர்கள் பாதிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிய முடியும். அறிக்கை கிடைத்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உணவில் விஷம் ஏதேனும் கலக்கப்பட்டதா என்பதை தற்போது சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ