ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
ஆனேக்கல்: ஆசிரியை தன்னை அவமரியாதையாக பேசியதால், மனம் நொந்த மாணவி, தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின், மரசூரு மடிவாளா கிராமத்தில் வசித்து வந்தவர் மதுஸ்ரீ, 14. இவர் இதே கிராமத்தில் உள்ள, அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். பள்ளியின் சில ஆசிரியர்கள், சிறு விஷயத்துக்கு கூட, மாணவர்களை கண்டபடி பேசி அவமதித்து வந்தனர். அதே போல, மதுஸ்ரீயின் மீதும், பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, அவமரியாதையாக பேசியுள்ளனர். இது மாணவியின் மனதை மிகவும் பாதித்தது. நேற்று முன் தினம் இரவு, தன் வீட்டில் உள்ள தன் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை பெற்றோர், அறைக்குள் சென்று பார்த்த போது, மகள் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், மதுஸ்ரீயின் உடலை மீட்டனர். விசாரணையை துவக்கினர். தற்கொலைக்கு முன், இவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், பள்ளியில் நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: அம்மா என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு இந்த பூமியில் வாழ, விருப்பம் இல்லை. பள்ளியில் நடந்த சம்பவத்தால், என் மனம் வருந்துகிறது. ஆசிரியை என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவமரியாதையாக பேசினார். அவரின் வார்த்தைகளை சகித்து கொண்டு வாழ, எ னக்கு விருப்பம் இல்லை. அக்கா நீங்கள், தம்பி - தங்கையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். அம்மாவை யாரும் திட்டக்கூடாது. அனைவரும் என்னை மன்னியுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.