ரூ.40 லட்சம் மதிப்புடைய தரமற்ற மருந்துகள் பறிமுதல்
பெங்களூரு : ''கர்நாடகாவில் கடந்த மாதம் மட்டும் 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தரமற்ற மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,'' என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கடந்த ஜூலையில், 1,557 சாலையோர உணவு வியாபாரிகளின் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், பாதுகாப்பற்ற முறையில் உணவு தயாரித்ததாக, 406 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது; 44,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மாநிலம் முழுதும் உள்ள பஸ் நிலையங்களில் தரமற்ற முறையில் உணவு தயாரித்த, 206 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது; 55,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த மாதத்தில் பெங்களூரு, ஹூப்பள்ளி, பல்லாரியில் உள்ள மருந்துக் கடைகளில் இருந்து 1,433 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 59 தரமற்ற மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டடன. இது போன்று மாநிலம் முழுவதும் 40 லட்சம் ரூபாய்க்கு அதிகமான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.