வெற்றி நிச்சயம்... இது வேத தத்துவம்
தாவணகெரே மாவட்டம் ஹெட்னே கிராமத்தை சேர்ந்தவர் முருகேஷப்பா, 65. விவசாயி. இவர், பி.பி.எம்., பட்டம் பெற்றவர். தனக்கு, 25 வயது இருக்கும் போது, ஹெச்.எம்.டி., தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நல்ல சம்பளம் வாங்கினார். இருப்பினும், அந்த வேலை மீது அவருக்கு அதிகம் ஈடுபாடில்லை. இதனால், சற்றும் யோசிக்காமல் தன் வேலையை ராஜினாமா செய்தார். தன் ஊரிலுள்ள நிலத்தில், 90ம் ஆண்டுகளில் விவசாயம் செய்ய துவங்கினார். இதனிடையே முருகேஷப்பாவுக்கு திருமணம் முடிந்தது. தினேஷ், சந்தோஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். உழைப்புக்கேற்ற ஊதியம் முருகேஷப்பா தன் நிலத்தில் விவசாயம் செய்வதில் வெறித்தனமாக இறங்கினார். இரவு, பகல் என நேரம், காலம் பார்க்காமல் உழைத்தார். உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது போல, அவருக்கு நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றாக நடக்க துவங்கின. தன் நிலத்தில், 90 சதவீதம் இயற்கை முறையிலும், 10 சதவீதம் செயற்கை ரசாயனங்களையும் பயன்படுத்தி வருகிறார். 7 ஏக்கரில் மாதுளை, 3 ஏக்கரில் பேரிக்காய், 12 ஏக்கரில் பாக்கு, மா, பலா, செவ்வாழை, மிளகு, பப்பாளி போன்றவற்றை பயிரிட்டு உள்ளார். இயற்கை முறையிலான மண்புழு உரத்தையும் தயார் செய்கிறார். இங்கிருந்து கிடைக்கும் உரத்தையே விவசாயம் செய்ய பயன்படுத்துகிறார். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது தோட்டத்தில் விளையும் பயிர்களுக்கு மார்க்கெட்டில் நல்ல மவுசு இருக்கிறது. அதற்கு, இவரது இயற்கை விவசாயமே காரணம். லட்சத்தில் வருமானம் திருமண நிகழ்ச்சிகளை நடத்துவோரும், ஸ்டார் ஹோட்டல்களை சேர்ந்தவர்களும், நேரடியாக தோட்டத்துக்கே வந்து, விவசாய உற்பத்தி பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் நல்ல லாபம் ஈட்டுகிறார். ஆண்டின் முடிவில் பயிர்கள் செழிப்பாக வளர்ந்தால், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகிறார். இந்த வருமானம் அனைத்து ஆண்டுகளிலும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. விவசாயத்தில் லாபம், நஷ்டம் என்பது நிச்சயம் ஏற்படும். இந்த வயதிலும் முருகேஷப்பா லட்சங்களில் சம்பாதிப்பதை, அவரது கிராமத்தினர் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே சமயம், அவரது உழைப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். மாவட்டத்தின் சிறந்த விவசாயி விருது, ஸ்ரீரங்கம் பல்கலை கழகத்தின் இந்தியாவின் சிறந்த விவசாயி விருது போன்றவற்றை முருகேஷப்பா பெற்றுள்ளார். மேலும், ஸ்ரீரங்கம் பல்கலை கழகம், 'கவுரவ டாக்டர்' வழங்கியும் கவுரவப்படுத்தி உள்ளது. தன்னுடைய பல்லாண்டு கால வாழ்க்கை பயணம் குறித்து முருகேஷப்பா கூறியதாவது: தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு செய்த வேலையை விட்டு விட்டு விவசாயத்தில் ஈடுபட்டேன். பல விதமான பயிர்களை பயிரிட்டேன். செவ்வாழைப்பழத்தை அரபு நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறேன். ஆண்டுக்கு, 70 முதல் 80 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். அதேபோல அனைவரும் செல்லும் வழியில் நாம் பயணிக்கக்கூடாது. சில வித்தியாசங்களை தொழிலில் புகுத்த வேண்டும். அப்போது, தான் வெற்றி கிட்டும். இவ்வாறு அவர் கூறினார். -நமது நிருபர் -: