பாதுகாவலரை துாக்கி வீசிய கோவில் யானையால் பரபரப்பு
தட்சிண கன்னடா: பக்தர்களுடன் விளையாடி கொண்டிருந்த போது, இடையூறு செய்தவரை கோவில் யானை தனது தும்பிக்கையால் துாக்கி வீசியது. தட்சிண கன்னடா மாவட்டத்தில், குக்கே சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடக்கும் ஆண்டு விழாவின் போது, கோவில் யானை யஷஸ்வினி மீது தண்ணீர் ஊற்றி பக்தர்கள் விளையாடுவது வழக்கம். இதை யானையும் ரசிப்பது வழக்கமாகும். அவ்வகையில், சமீபத்தில் நடந்த திருவிழாவின் போது யானை மீது பக்தர்கள் சூழ்ந்து கொண்டு தங்கள் கைகளால் தண்ணீரை அடித்தனர். அப்போது, யானையும் மகிழ்ச்சியாக நடனமாடியது. இந்த சமயத்தில், யானைக்கு முன்பு வந்த கோவில் ஊழியர், அங்கிருந்தவர்களை பார்த்து நகர்ந்து செல்லுங்கள் என சைகை காட்டினார். இதில், ஆத்திரமடைந்த யானை அந்நபரை தனது தும்பிக்கையால் துாக்கி எறிந்தது. இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் நின்ற இடத்தில் இருந்து பின்னோக்கி செல்ல முயன்றனர். ஆனால், யானை மீண்டும் சாந்தமான நிலைக்கு திரும்பியது. மீண்டும் பக்தர்களுடன் விளையாட துவங்கியது. யானை அந்நபரை துாக்கி எறியும் வீடியோ, சமூக வலைதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.