தங்கவயல் செக் போஸ்ட்
கோல்டு தொகுதிக்கும் சிக்கலா? சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் கை கட்சியின் 'ஸ்ட்ராங்' தொகுதியான பா.பள்ளியில் தேர்தல் கமிஷனுக்கு நிதி கணக்கு காட்டாமல், டிமிக்கி கொடுத்து வரி ஏய்ப்பு செய்து சிக்கிக் கிட்ட அசெம்பிளி கத்தாரில் மோசடி அம்பலமானது. இதனால் 'மாநிலத்தின் பெரிய நீதிமன்றம்' கல்தா கொடுத்திடுச்சி. தேசிய தலைநகரின் மகா நீதிமன்றத்தை நாடப்போகின்றனராம். அங்கும் தீர்ப்பு என்ன ஆகப்போகுதோ. கோலாரு மாவட்டத்தில் கோல்டு சிட்டி அசெம்பிளிகாரர் மீதும் கூட, புல்லுக்கட்டுக் காரர் ஒரு வழக்கு தொடுத்தாரு. இந்த வழக்கும் கூட நிலுவையில் இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளன. இதுவும் என்ன ஆகப்போகுதோ. ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் ரெண்டு இடத்தில பெயர் இருந்ததை கண்டுபிடித்து வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேணும்னு ஒரு 'மாஜி' கூப்பாடு போட்டாரு. வேட்புமனு செய்தவரின் நைனா, 'பவர் யூஸ்' பண்ணி துமகூரில் இருந்த பெயரை நீக்க வெச்சாரு. அது போல இப்பவும் அதிகார பலம் யூஸ் ஆகுமா அல்லது மறு தேர்தலுக்கு தயார் ஆகணுமா. எப்படியோ சட்டத் தீர்ப்பு வந்த பிறகே ஆட்டமா, கொண்டாட்டமான்னு தெரியும். வட்டி குட்டி போடுமா? ம.அரசின் தொழிற்சாலைகள் வரி செலுத்தாமல், 100 கோடி ரூபாய் பாக்கி வெச்சிருப்பதாக ஸ்டேட் மந்திரி சொன்னாரு. அந்த ரூபாயை வசூலிக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன் 'டமாரம்' அடிப்பாங்களா. மார்க்கெட் கடைக்காரர்கள் வாடகை பாக்கிக்கு வட்டிக்கு வட்டி, கூட்டு வட்டி, மீட்டர் வட்டியான்னு தெரியாமல் பல மடங்கு திணித்திருப்பதாக வியாபாரிகள் தரப்பில் சொல்றாங்க. உள்ளூர்காரங்களுக்கு வேலை வாய்ப்பை இருட்டடிப்பு செய்ற அரசு கம்பெனிகள், 100 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதால் இவற்றுக்கும் வட்டி குட்டிப்போடுமா? 'ஜீ பூம்பா' வேலையாமே! ஊரெல்லாம் தெருவிளக்கு எரிய வைக்க, '4 சி' செலவழிச்சதா கணக்கு சொல்றாங்க. அது யாரோட பணம்; அசெம்பிளி தொகுதிக்குரிய நிதியா, செங்கோட்டைக்காரரின் தொகுதி அபிவிருத்திக்காக வழங்கப்பட்டதா; முனிசி.,க்கு கிடைத்த வரி வருமானத்தில் ஏற்படுத்தப்பட்டதா. எல்.இ.டி., தெரு விளக்கு ஏற்படுத்தும் முன், சோடியம் விளக்குகள் என்னானது. அது எங்கே; விற்கப்பட்டதா. அப்படி விற்றிருந்தால் எவ்வளவு தொகைக்கு விற்பனையானது. இந்த தொகை எந்த கணக்கில் உள்ளது. மின் விளக்கு பராமரிக்க மாதந்தோறும் பல ஆயிரம் தர்றாங்க. எல்லாவற்றுக்கும் 25 பர்சென்ட் 'கால் முளைத்து' யார் வீட்டுக்கு போனது. எல்லாமே ஜீ பூம்பா வேலை என்கிறாங்க உண்மையா? மறுபடியுமா? பிச்சைக்காரர் மறுவாழ்வு மையம் ஒன்றை கோல்டு சிட்டியில் ஏற்படுத்தினாங்க. இதுக்காக ஒரு சமுதாய கூடத்தை ஒதுக்கினாங்க. படுக்க வசதி இல்லாமல் பஸ் நிலையம், ரயில் நிலையம், பூங்கா, கடைத் தெருவில் இருக்கிறவங்கள வேன், ஆட்டோக்களில் அழைத்து சென்று குளிக்க, கழிப்பறை, தங்குவது, உணவு என சகல வசதிகளையும் செய்வதற்கு, தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைச்சாங்க. அந்த அமைப்புக்கு எட்டு மாதமாக உரிய தொகையை பட்டுவாடா செய்யாததால், அவங்க தொண்டு செயலை நிறுத்திட்டாங்க. முனிசி.,க்கு பல கோடி வருமானம் குவிஞ்சாலும், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்கென வரியை வசூலித்தாலும், பிச்சைக்காரர் மறுவாழ்வு மையத்தை மூடிட்டாங்க. ஆபீசர்களின் தர்பாரில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பழையபடி பஸ் நிலையம், ரயில் நிலையம், பூங்காக்களில் தங்குறவங்கள என்ன செய்யப்போறாங்க.