தனியார் - அரசு பஸ்கள் மோதலில் இருவர் பலி
துமகூரு: தனியார் பஸ் மீது அரசு பஸ் மோதியதில், இருவர் உயிரிழந்தனர். துமகூரு மாவட்டம், சிரா தாலுகாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 48ல், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு சாலையோரத்தில் தனியார் ஆம்னி பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, அவ்வழியே அதிவேகமாக வந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், எதிர்பாராத விதமாக தனியார் பஸ்சின் பின்புறத்தில் மோதியது. இதில், ஆம்னி பஸ்சின் பின்புறமும், அரசு பஸ்சின் முன்புறமும் சேதம் அடைந்தது. தனியார் பஸ்சில் பயணித்த ஹாவேரியை சேர்ந்த பிரவீன் கிருஷ்ணப்பா, 28, கதக் மாவட்டத்தை சேர்ந்த சங்கீதா, 16, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 35 பேர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் சிரா போலீசார் விசாரித்து வருகின்றனர்.