பி.எம்.டி.சி., வருவாயில் யு.பி.ஐ., பங்கு 40 சதவீதம்
பெங்களூரு : பி.எம்.டி.சி., பஸ்களில் கடந்த மாதம் கிடைத்த வருவாயில் 40 சதவீதம், யு.பி.ஐ., செயலிகள் வாயிலாக வந்துள்ளது.பி.எம்.டி.சி., பஸ்களில் டிக்கெட் வழங்கும்போது ஏற்படும் சில்லரை பிரச்னையை தவிர்க்க, யு.பி.ஐ., செயலிகள் மூலம் பணம் அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது பஸ்சில் பயணம் செய்யும் பலரும் யு.பி.ஐ., வாயிலாக டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கடந்த மாதம் பி.எம்.டி.சி., நிர்வாகத்திற்கு கிடைத்த வருவாய் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.பி.எம்.டி.சி., நிர்வாகத்திற்கு கடந்த மாதம் 89 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதில், 35.5 கோடி ரூபாய் யு.பி.ஐ., செயலிகள் வாயிலாக பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்த வருவாயில் 40 சதவீதம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளது. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. யு.பி.ஐ., செயலிகள் மூலம் பணம் செலுத்துவதால், டிக்கெட்டுகளை வேகமாக வழங்குவதற்கும், சில்லரை பிரச்னைகள் போன்றவற்றுக்கு தீர்வு கிடைத்துள்ளதாக பஸ் நடத்துநர்கள் கூறுகின்றனர்.