உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ராஜினாமா

மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ராஜினாமா

பெங்களூரு: காலையில் ராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதாக கூறியிருந்த மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, 78, மாலையில் ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்தார்.பெங்களூரில் நேற்று காலையில் அவர் அளித்த பேட்டி:கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் உரையை கிழித்து வீசிய சம்பவம் எனக்கு மனவேதனை அளிக்கிறது. இங்கு மூத்தவர் பேச்சுக்கு மரியாதை இல்லை. மேல்சபை சிந்தனையாளர்கள் நிறைந்த சபையாகும்; நாட்டிற்கு முன்மாதிரியாக திகழ்கிறது.இப்படிப்பட்ட மேல்சபையில், தலைவராக இருப்பது கவுரவமானதாகும். விதிகள்படி சபை நடக்காவிட்டால், அதன் தலைவராக இருப்பதில் எந்த பயனும் இல்லை என்று தோன்றுகிறது.

'சஸ்பெண்ட்' சரியல்ல

நான் இப்பதவிக்கு தகுதியானவரா, உறுப்பினர்களை கட்டுப்படுத்தாதது என் தவறா அல்லது வேறொருவரின் தவறா என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. எனவே, நான் ராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருகிறேன்.உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வது பாரம்பரியம் அல்ல. இரண்டு நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யலாம்; ஆனால் ஆறு மாதம் என்பது சரியல்ல.சி.டி.ரவி மற்றும் லட்சுமி ஹெப்பால்கர் வழக்கில், என் அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுத்து உள்ளேன். சபையை முறையாக நடத்தவில்லை என்றால், அதற்கு நாம் தகுதியானவர்கள் அல்ல.

விதிமீறல்

விவாதிக்க முக்கியமான விஷயங்கள் இருக்கும் போது, வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கின்றனர். முக்கிய மசோதாக்கள், விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படுகின்றன. சட்டசபையில் கூச்சலோ, குழப்பமோ கூடாது என்ற விதியை, யாரும் பின்பற்றுவதில்லை.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இதன்பின், அவர் தனது சொந்த ஊரான ஹூப்பள்ளி சென்றார். நேற்று மாலை அவர் அளித்த பரபரப்பு பேட்டி:சபையில் மூத்தவர்களுக்கு மரியாதை இல்லை. கடந்த 45 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறேன். இன்றைய அரசியல்வாதிகளில், நான் மூத்தவன் என்பதை மறந்து விட்டனர். என் வயதுக்கு கூட மரியாதை இல்லை. சபையில் நான் பேசினாலும் யாரும் கவனிப்பதில்லை. இனி நான் சபையில் இருக்க கூடாது என்று முடிவு செய்து விட்டேன். எனவே என் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.இத்துடன், மேல்சபை துணைத் தலைவர் பா.ஜ.,வின் பிரானேசுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'என் தனிப்பட்ட காரணங்களால், ராஜினாமா செய்கிறேன். இம்மாதம் 31ம் தேதிக்குள் ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.ஆனால், அவர் அனுப்பிய கடிதத்தில், மார்ச் 18ம் தேதி என்று தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் தனது முடிவை, சில நாட்களுக்கு முன்பே எடுத்துள்ளது தெரிகிறது.

த்தியம்

கர்நாடக மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, ம.ஜ.த.,வில் இருந்தவர். அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். அதன்பின், மேல்சபை தலைவரானார். மேல்சபை தலைவராக, நேர்மையாக பணியாற்றி வந்தார். அவர் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் மரியாதை வைத்துள்ளனர்.பா.ஜ., ஆட்சியில், மேல்சபையில் காங்கிரசில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ம.ஜ.த., ஆதரவுடன் பதவியில் அமர்ந்திருந்தார். இதை விரும்பாத காங்கிரஸ், அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டது. இதற்கு தோதுவாக, தற்போது ஆளுங்கட்சியான காங்கிரஸ், மேல்சபையில் மெஜாரிட்டி உறுப்பினர்களை கொண்டிருந்தது.இதை அறிந்திருந்த ஹொரட்டி, 'என் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பே, என் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முன்பு பார்த்த ஆசிரியர் பணிக்கு திரும்புவேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.சட்டசபை கூட்டத்தொடரில், 'ஹனி டிராப்' விஷயம் பெரும் விவாதத்தை கிளப்பியது. இவ்விஷயத்தில் சட்டசபையில் போராட்டம் நடத்திய 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை, ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து, சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டிருந்தார்.அதுபோன்று மேல்சபையிலும் இவ்விஷயம் விவாதிக்கப்பட்டது. அப்போது பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேல்சபை தலைவர் பலமுறை கூறியும் யாரும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்தாண்டு பெலகாவியில் நடந்த குளிர்கால சட்டசபை கூட்டத்தொடரில், பா.ஜ., - எம்.எல்.சி., சி.டி.ரவி - அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால், மேல்சபைக்குள் சென்று விசாரணை நடத்த சி.ஐ.டி.,க்கு பசவராஜ் ஹொரட்டி அனுமதி அளிக்கவில்லை. இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள், அவர் மீது கடுப்பில் இருந்தனர்.நடந்து முடிந்த மேல்சபை கூட்டத்தொடரிலும், சில விஷயங்களில் விவாதிக்க, ஆளும் கட்சியினருக்கு அவர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவரை பதவியிலிருந்து கீழே இறக்க காங்., தலைவர்கள் ஆலோசித்து வந்தனர். அப்படி நடந்தால், தனது அரசியல் வாழ்க்கைக்கு கரும்புள்ளி ஆகி விடும் என கருதியே பசவராஜ் ெஹாரட்டி ராஜினாமா செய்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ