உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு தடை

ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு தடை

தங்கவயல்: 'ராபர்ட்சன்பேட்டை தேசிய கவி குவெம்பு பஸ் நிலையத்திற்குள் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் தவிர மற்ற எந்த வாகனமும் நுழைய அனுமதி இல்லை' என, தங்கவயல் நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.ராபர்ட்சன்பேட்டையில் நகராட்சிக்கு சொந்தமான குவெம்பு பஸ் நிலையம் உள்ளது. இங்கு அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, வரி வசூலிக்க டெண்டரும் விடப்படுகிறது.இந்த பஸ்களுக்கே போதுமான இடவசதி இல்லை. இவை மட்டுமின்றி பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.இதனால் பஸ் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பஸ்களை தவிர, மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று பஸ் நுழைவு பகுதியில் 'செக்போஸ்ட்' அமைத்து மூன்று ஷிப்ட்டுக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.இரு சக்கர வாகனங்கள் நுழைவை தடுக்க, தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டன. இவை ஓரிரு மாதங்களில் மாயமாகின. மீண்டும் பழையபடி எல்லா வாகனங்களும் பஸ் நிலையத்திற்குள் சகஜமாக வந்து செல்கின்றன.இந்நிலையில் நேற்று தங்கவயல் நகராட்சி ஆணையர், 'ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்தினுள் தனியார், அரசு பஸ்களை தவிர வேறு எந்த வாகனமும் நுழைய அனுமதி இல்லை' என்று தெரிவித்துள்ளார்.இந்த உத்தரவு போட்ட பின், நேற்று மாலையும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாகவே காண முடிந்தது.

இயங்கவில்லை?

தங்கவயல் நகராட்சி பகுதியில் பஸ் டிப்போ அருகில், அரசு பஸ்களுக்கென பஸ் நிலையம் கட்டப்பட்டது. 2006 ஜூலை 28ல் அப்போதைய முதல்வர் குமாரசாமி திறந்து வைத்தார். இன்று வரை அந்த பஸ் நிலையம் இயங்கவில்லை. ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்தில் இட நெருக்கடி உள்ளதால் தான், அரசு பஸ்களுக்காக தனி பஸ் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதை செயல்படுத்தாமல் சிலரின் ஓய்வறையாக மாறியிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ