இன்று திருமணம்: மாரடைப்பால் மணப்பெண் உயிரிழப்பு
சிக்கமகளூரு: இன்று மணமேடை ஏறவிருந்த மணப்பெண், நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். சிக்கமகளூரு மாவட்டம், அஜ்ஜம்புரா தாலுகாவின் சொல்லாபுரா கிராமத்தில் வசித்தவர் ஸ்ருதி, 32. இவருக்கும், தரிகெரேவின் திலீப் என்பவருக்கும், திருமணம் நிச்சயம் செய்து, தரிகெரேவில் உள்ள அன்னபூர்னேஸ்வரி திருமண மண்டபத்தில், இன்று திருமணம் நடக்கவிருந்தது. இரண்டு குடும்பத்தினரும், திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். மணமகள் ஸ்ருதியின் வீடு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள் வந்தனர். அனைவரும் மண்டபத்துக்கு செல்ல தயாரான நிலையில், ஸ்ருதிக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது திருமண சடங்குகளை நிறுத்திவிட்டு, மகளின் இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யும் நிலை ஏற்பட்டதால், பெற்றோர் மனம் நொந்துள்ளனர்.