உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கள்ளத்தொடர்புக்கு இடையூறு கணவரை கொன்ற மனைவி கைது

கள்ளத்தொடர்புக்கு இடையூறு கணவரை கொன்ற மனைவி கைது

கலபுரகி:கலபுரகி மாவட்டம், சித்தாபுரா தாலுகாவின் பாகோடி கிராமத்தைச் சேர்ந்தவர் திப்பண்ணா குபேந்திரா, 30. இவரது மனைவி சாந்தம்மா, 25. சில மாதங்களாக சாந்தம்மாவுக்கு, அதே கிராமத்தை சேர்ந்த வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அவ்வப்போது சந்தித்து, உல்லாசமாக இருந்தனர்.இந்த விஷயம் திப்பண்ணா குபேந்திராவுக்கு தெரிய வந்தது. மனைவியை கண்டித்தார். இதனால், தம்பதிக்கிடையே அவ்வப்போது சண்டை நடந்தது. கணவரை தீர்த்துக் கட்டினால் மட்டுமே நிம்மதியாக இருக்க முடியும் என, சாந்தம்மா நினைத்தார். இதற்கு கள்ளக்காதலனும் சம்மதித்தார்.நேற்று முன் தினம் நள்ளிரவு, திப்பண்ணா துாங்கிக் கொண்டு இருந்தார். அப்போது கள்ளக்காதலனை சாந்தம்மா வரவழைத்தார். இருவரும் சேர்ந்து திப்பண்ணா குபேந்திராவின் முகத்தில் தலையணையை அழுத்திக் கொலை செய்தனர். இவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அங்கு வந்து கதவை தட்டினர். பல முறை தட்டியும் திறக்கவில்லை.அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சித்தாபுரா போலீசார், அங்கு வந்தனர். போலீசாரை பார்த்ததும் பீதியடைந்த கள்ளக்காதலன், வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பியோடினார். அதன்பின் சாந்தம்மா கதவை திறந்தார். போலீசார் வீட்டுக்குள் சென்று தேடியபோது, திப்பண்ணா குபேந்திரா கொலை செய்யப்பட்டது தெரிந்தது.சாந்தம்மாவை விசாரித்தபோது, கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய காதலனை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை