ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண்கள்
மாண்டியா: பிரசவ வலி ஏற்பட்டதால் ஓடும்பஸ்சிலேயே கர்ப்பிணிக்கு, பெண் பயணியரே பிரசவம் பார்த்தனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் ரஷ்மி, 24. இவரது கணவர் ராஜ்குமாரும், குடும்பத்தினரும் மைசூரின் பண்ணை ஒன்றில் பணியாற்றுகின்றனர்; இங்கேயே தங்கியுள்ளனர். ரஷ்மிநிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தன் குடும்பத்துடன், நேற்று முன்தினம் மாலை மைசூரில் இருந்து, பெங்களூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் ரஷ்மி புறப்பட்டார். மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவின், கெஜ்ஜலகெரே கிராமம் அருகில் வந்தபோது, ரஷ்மிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வழியில் மருத்துவமனை ஏதும் இல்லை. வேறு வழியின்றி பஸ்சை ஓரமாக நிறுத்தி, ஆண் பயணியரை கீழே இறக்கினர். பெண் பயணியர் சேர்ந்து, ரஷ்மிக்கு பிரசவம் பார்த்தனர். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயையும், குழந்தையையும் மத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தேவையான சிகிச்சை வசதிகள் இல்லாத காரணத்தால், முதலுதவி சிகிச்சை அளித்து, மாண்டியாவின், மிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாயும், சேயும் ஆரோக்கியமாக உள்ளனர். ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு, பிரசவ வலி ஏற்பட்டபோது, பெண் பயணியர் தைரியத்துடன் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றியதை பலரும் பாராட்டினர்.