புதுடில்லி:எஸ்.பி.ஐ., வங்கி, உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் வாயிலாக 10,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான, எஸ்.பி.ஐ., வங்கி, உள்கட்டமைப்பு கடன் பத்திரங்கள் வாயிலாக 10,000 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளதாகவும்; இதுதொடர்பாக பங்குச் சந்தை பங்கேற்பாளர்களுடன் பேச்சு நடத்த துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்கள், வருகிற ஜூலை முதல் வரவேற்கப்படலாம் என தெரிகிறது. மேலும், இக்கடன் பத்திரங்கள் 10 அல்லது 15 ஆண்டுகள் காலவரையறை கொண்டதாக இருக்கும் என்றும், முதலீட்டாளர்களின் கருத்துகளை பொறுத்து இது இறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.இத்திட்டம் இறுதி செய்யப்படும் பட்சத்தில், நடப்பு நிதியாண்டில் இதுவே இந்தியாவில் எஸ்.பி.ஐ.,யின் முதல் கடன் பத்திர வெளியீடாகும். மேலும், நடப்பு நிதியாண்டில் நாட்டின் முதல் உள்கட்டமைப்பு கடன் பத்திர வெளியீடும் இதுவாகவே இருக்கும்.ஏற்கனவே, எஸ்.பி.ஐ., வங்கி இம்மாத துவக்கத்தில், தன் லண்டன் கிளை வாயிலாக கடன் பத்திரங்களை வெளியிட்டு 830 கோடி ரூபாயும், இதற்கு முன்னதாக கடந்த ஜனவரியில் 5,000 கோடி ரூபாயும் திரட்டியிருந்தது. இதுமட்டுமின்றி, கடந்த நிதியாண்டில் உள்கட்டமைப்பு கடன் பத்திரங்கள் வெளியிட்டதன் வாயிலாக, வங்கி 20,000 கோடி ரூபாய் திரட்டியது.
எல்.ஐ.சி., மறுப்பு
எல்.ஐ.சி., நிறுவனம் நாடு முழுதும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள நிலம், கட்டடங்களை விற்பனை செய்து, அதன் வாயிலாக 50,000 முதல் 60,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள எல்.ஐ.சி., அச்செய்திகளில் உண்மை இல்லை என்றும், அவை தவறானவை என்றும் அறிவித்துள்ளது.