| ADDED : ஜன 17, 2024 11:35 PM
புதுடில்லி: டாலரை தவிர்க்கும் எண்ணம் எதுவும் இல்லை எனவும்; டாலரே ஆதிக்கம் செலுத்தும் நாணயமாக தொடரும் எனவும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துஉள்ளார்.டாவோசில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில், சக்திகாந்த தாஸ் கூறியதாவது:இந்திய ரூபாயை, உலகளாவிய கரன்சியாக மாற்றும் முயற்சிகள், டாலரை தவிர்ப்பதற்கான நோக்கம் கொண்டவை அல்ல. ஒரே ஒரு கரன்சியை மொத்தமாக சார்ந்து இருப்பது, உலகளாவிய வர்த்தகத்தை, ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்கக்கூடும். இதன் காரணமாக, பல கரன்சிகளுக்கான தேவை உருவாகக்கூடும்.ரிசர்வ் வங்கியால் நாணய ஸ்திரத்தன்மை அடைய முடிந்தது. இது, வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு சந்தைகளில் நுழைவதற்கும் ஏற்றதாக அமைகிறது.சர்வதேச வர்த்தகத்தில் அதிகரித்து வரும் இந்தியாவின் பங்கால், அதன் பொருளாதாரம் விரிவடைந்து வருகிறது. படிப்படியாக இந்தியா புதிய சந்தைகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் நுழைந்துள்ளது. சர்வதேச வர்த்தகத்தில், ரூபாயை மாற்று நாணயமாக வழங்குவதே தற்போது நோக்கமாக உள்ளது. அதை தவிர, டாலர் அல்லாத நிலையை நோக்கி நகரும் எண்ணம் எதுவும் இல்லை. டாலரே ஆதிக்கம் செலுத்தும் நாணயமாக தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.