பழங்குடியினர் ஸ்டார்ட்அப் முதலீடு செய்ய அரசு அழைப்பு
சென்னை:தமிழகத்தில், 'ஸ்டார்ட்அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி, முதலீடு உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் மேற்கொள்கிறது. இந்நிறுவனம், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதி திட்டத்தை, 2022ல் துவக்கியது.இத்திட்டத்தின் கீழ், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களில், சிறப்பாக செயல்படும் நிறுவனங்களின் நிதி தேவைக்கு ஏற்ப, அரசு பங்கு முதலீடு செய்கிறது. அதன்படி, நடப்பு, 2025 - 26ம் நிதியாண்டிற்கு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு, விருப்பம் உள்ள நிறுவனங்களை விண்ணப்பிக்க, ஸ்டார்ட்அப் டி.என்., அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு, ஸ்டார்ட்அப் டி.என்., இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் திட்டத்தில், 41 நிறுவனங்களில், 57 கோடி ரூபாயை அரசு, பங்கு முதலீடாக செய்துள்ளது.