தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க தவறினால் 250 ேகாடி ரூபாய் வரை அபராதம் தரவு பாதுகாப்பு விதிகளை வெளியிட்டது அரசு
புதுடில்லி: சமூக வலைதளங்கள், இ - காமர்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்டவை, மூன்று ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் கணக்குகளில், தனிநபர் தரவுகளை அழித்து விட வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று மத்திய அரசு, டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகளை வெளியிட்டுள்ளது. இதில், வாடிக்கையாளார்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் தனியார் நிறுவனங்கள், இதை எவ்வளவு காலம் பராமரிக்கலாம், பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் என்னென்ன, வெளிநாட்டு பரிமாற்றத்துக்கான நிபந்தனைகள் என்ன என்பவை குறித்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இவை அடுத்த 12 முதல் 18 மாதங்களில், படிப்படியாக நடைமுறைக்கு வரவிருக்கின்றன. இ - காமர்ஸ் நிறுவனங்கள், ஆன்லைன் கேமிங் தளங்கள், சமூக வலைதளங்கள் போன்றவை, ஒரு குறிப்பிட்ட பயனர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கணக்கை பயன்படுத்தாமல் இருக்கும்பட்சத்தில், அவரது தனிப்பட்ட தகவல்களை அழித்துவிட வேண்டும். சம்பந்தப்பட்ட நபருக்கு இதுகுறித்து 48 மணி நேரத்துக்கு முன்பாக தகவல் வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களின் ஒப்புதலின்றி, ஸ்பேம் அழைப்புகளுக்கு அவர்களது போன் எண்களை கசிய விடுவோர் மீது நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். பொதுநலன் கருதி, அரசு அதிகாரிகள் குறித்து கேட்கப்படும் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, 2027 மே மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களுக்கு அடுத்தாண்டு நவம்பர் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுகிறது. தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க தவறும், தரவு பொறுப்பு நிறுவனங்களுக்கு, 250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். குடிமக்களுக்கு, தங்களது தனிப்பட்ட தகவல்கள் மீது கட்டுப்பாட்டை வழங்குவதோடு; தங்களது தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், இணையதளத்தில் தனியுரிமையை பாதுகாக்கவும், இந்த விதிமுறைகள் உதவும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.