தொழில்துறை உற்பத்தி செப்டம்பரில் 4 சதவிகிதம் வளர்ச்சி
புதுடில்லி: நாட்டின் தொழில் துறை உற்பத்தி கடந்த செப்டம்பர் மாதத்தில் 4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு துறையின் வலுவான செயல்பாடே இதற்கு முக்கிய காரணமாக அமைந்து உள்ளது. தொழில்துறை உற்பத்தி கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் 3.20 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாத வளர்ச்சி முன்பிருந்த 4 சதவீதத்திலிருந்து தற்போது 4.10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதத்தை பொறுத்தவரை தயாரிப்பு துறை உற்பத்தி 4.80 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இது கடந்தாண்டு செப்டம்பரில் 4 சதவீதமாக இருந்தது. மின்சாரத் துறை உற்பத்தி வளர்ச்சி 0.50 சதவீதத்திலிருந்து 3.10 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், சுரங்கத்துறை உற்பத்தி 0.40 சதவீதம் சரிந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் ஆறு மாதங்களில், சராசரி தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 4.10 சதவீதமாக இருந்தது.