பதஞ்சலிக்கு மலேஷிய நிறுவனம் 15 லட்சம் பனை விதை சப்ளை
புதுடில்லி:மலேசிய அரசு நிறுவனமான சவிட் கினபாலு குழுமம், இந்திய நிறுவனமான பதஞ்சலி குழுமத்துடன் மேற்கொண்ட 5 ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இதுவரை 15 லட்சம் பனை விதைகளை வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு அதிகளவில் பாமாயில் வழங்கும் முக்கிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இறக்குமதி சார்பு நிலையை குறைக்கவும், உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், இந்திய நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலி, மலேஷிய அரசு நிறுவனமான சவிட் கினபாலு குழுமத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், 5 ஆண்டுகளில் பதஞ்சலிக்கு 40 லட்சம் பனை விதைகளை சவிட் கினபாலு குழுமத்தின் துணை நிறுவனம் வழங்கும். மலேசிய அரசு நிறுவனம் பனை விதைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது இதுவே முதல்முறையாகும். இதுகுறித்து, அக்குழுமத்தின் விதை பிரிவு பொதுமேலாளர் ஜூரைனி தெரிவித்துள்ளதாவது:ஒப்பந்தத்தின்படி, இதுவரை பதஞ்சலிக்கு 15 லட்சம் பனை விதைகள் வழங்கப்பட்டுள்ளன. விதைகளை வழங்குவதுடன், ஆலோசனை, நடப்பட்ட விதைகள் கண்காணிப்பு, வேளாண் விஞ்ஞானிகள் களஆய்வு உள்ளிட்ட சேவைகளையும் நிறுவனம் வழங்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.