ஆராய்ச்சிக்கான தலைநகராக தமிழகத்தை மாற்ற முயற்சி அமைச்சர் ராஜா பேச்சு
சென்னை ''தமிழகத்தை ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் தலைநகரமாக மாற்ற தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்,'' என, தொழில் துறை அமைச்சர் ராஜா கூறினார். தமிழக அரசின் திட்டக்குழு சார்பில், 'தமிழ்நாடு நிலைப்பாடுகள் -2025' என்ற தலைப்பில், இரண்டு நாள் மாநாடு, சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்காவில் நேற்று துவங்கியது. இதில், தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா பேசியதாவது: இந்த மாநாட்டில், 150க்கும் மேற்பட்ட பல்கலையை சேர்ந்த, 800க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சிகளை சமர்ப்பித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு வகைப்பாடுகள் கொண்ட நிலங்களை, எப்படி பயன்படுத்தலாம், எந்த நிலத்தை பயன்படுத்து வது, எந்த நிலத்தை பாதுகாப்பது போன்ற புரிதலை ஏற்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நகர பகுதிகளில் வெப்பத்தை குறைக்கவும், பசுமை பரப்பை அதிகரிக்கவும் ஆய்வுகள் நடைபெற்று வருவதுடன், இந்த மாநாட்டில் அது குறித்து விவாதிக்கப்படும். தமிழகத்தை, ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் தலைநகரமாக மாற்ற தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.