87,000 பின்தங்கிய இளைஞர்களுக்கு நாஸ்காம் திறன் வளர்ப்பு பயிற்சி
புதுடில்லி:நலிந்த பிரிவுகளை சேர்ந்த 87,000 இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கவுள்ளதாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சங்கமான நாஸ்காம் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது. ஐ.பி.எம்., நிறுவனத்துடன் இணைந்து, தகவல் தொழில்நுட்ப துறை பணிகளுக்கு இளைஞர்களை தயார்படுத்தும் நோக்கில் இதை நாஸ்காம் பவுண்டேஷன் வழங்கவுள்ளது. ஏ.ஐ., சைபர் செக்யூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனலடிக்ஸ், புரபஷனல் டெவலப்மென்ட் ஆகியவற்றில் சமீபத்திய தொழில்நுட்பங்கள் பயிற்றுவிக்கப்படும் என அது தெரிவித்துள்ளது. வரும் 2030க்குள் உலகம் முழுவதும் 3 கோடி பேருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கும் ஐ.பி.எம்., நிறுவனத்தின் இலக்கில், நம் நாட்டில் 87,000 பேருக்கு அந்நிறுவனம் இதை செய்யவுள்ளது.