உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பஜாஜ் அலையன்ஸ் காப்பீட்டாளர்களுக்கு பணமில்லாமல் சிகிச்சை கிடையாது

பஜாஜ் அலையன்ஸ் காப்பீட்டாளர்களுக்கு பணமில்லாமல் சிகிச்சை கிடையாது

புதுடில்லி:பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு வைத்திருப்பவர்களுக்கு, பணமில்லாமல் சிகிச்சை அளிக்க வேண்டாம் என, வட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளை, இந்திய சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது. பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம், பாலிசிதாரர்களின் சிகிச்சைக்கான கட்டணத்தை மருத்துவமனைகளுக்கு முழுமையாக திருப்பிச் செலுத்துவதில்லை; மேற்கொண்டு காலம் தாழ்த்துவதோடு, தன் விருப்பத்துக்கேற்ப கட்டணத்தை கழித்துக்கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அதிகரித்து வரும் மருத்துவ செலவுகளுக்கு ஏற்ப, மருத்துவமனைகளுக்கு வழங்கும் கட்டணத்தை உயர்த்த மறுப்பு தெரிவிப்பதாகவும்; மாறாக கட்டணத்தை குறைக்க அழுத்தம் தருவதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல், பஜாஜ் அலையன்ஸ் காப்பீடுதாரர்களுக்கு பணமில்லாமல் சிகிச்சை அளிப் பதை தற்காலிகமாக நிறுத்த அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, மேக்ஸ் ஹெல்த் கேர் உள்ளிட்ட 15,000க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பஜாஜ் அலையன்சில் காப்பீடு செய்துள்ள நோயாளிகளுக்கு பணமில்லாமல் சிகிச்சை வழங்குவதை நிறுத்தவுள்ளன. இதனிடையே, சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவமனைகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டு, நிலுவைத்தொகை உள்ளிட்ட பிற சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என, பஜாஜ் அலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ