உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சிறு தொழில், புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவ துல்லிய பொறியியல் மையம் திறப்பு

சிறு தொழில், புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவ துல்லிய பொறியியல் மையம் திறப்பு

சென்னை:தமிழகம் முழுதும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கத்தில், துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர், சர்வதேச சந்தையில் போட்டியிட, உற்பத்தித் திறன் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், வளர்ந்து வரும் தொழில் பிரிவில் நுழையவும், ஐந்து இடங்களில், 100 கோடி ரூபாயில், 'மெகா கிளஸ்டர்' திட்டம் துவக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. சென்னை மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம், 'சிட்கோ' தொழிற்பேட்டையில், தொழில்முனைவோர் கூட்டமைப்பினருடன் இணைந்து, 47.62 கோடி ரூபாய் செலவில், உயர்தொழில்நுட்ப 'பிரிசிஷன் இன்ஜினியரிங்' அதாவது, துல்லிய பொறியியல் உற்பத்தி பெருங்குழுமம் அமைக்க, அரசு உத்தரவிட்டது. அதில், 33.33 கோடி ரூபாய் அரசு மானியம் அளிக்கிறது.உயர் தொழில்நுட்ப பிரிசிஷன் இன்ஜினியரிங் தொழில்நுட்ப மையத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள, 14க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழிற்பேட்டை சங்கத்தினரால் இணைந்து உருவாக்கப்பட்ட சிறப்பு முகமை வாயிலாக, இந்த மையம் செயல்படுத்தப்படுகிறது.தமிழகம் முழுதும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள மையத்தின் பொது வசதிகளை, அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், இளம் தலைமுறை பொறியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் ஆகியோர் பயன்படுத்திக்கொள்ள அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ரூ.18 கோடியில் முதல் மையம்

திட்டத்தின் முதல் பகுதியாக, திருமுடிவாக்கம் மையத்தில் 18.18 கோடி ரூபாயில், 13.33 கோடி ரூபாய் மானியத்துடன், 'இன்ஜினியரிங் டிசைன் சென்டர், ரீ இன்ஜினியரிங் லேப், அடிடிட்டிவ் மெனுபேக்சரிங் சென்டர்' மற்றும் காப்புரிமை பதிவு வசதி மையம், நவீன பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ