வர்த்தக துளிகள்
'எத்தனால் இறக்குமதிக்கு சலுகை இல்லை' புதுடில்லி: இந்தியா - அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக பேச்சில், எரிபொருளுடன் கலப்பதற்கான எத்தனால் இறக்குமதிக்கு எந்தவித சலுகையோ, உறுதியோ இந்தியா அளிக்கவில்லை என மத்திய வர்த்தக துறை தெரிவித்துள்ளது. மேலும், பெட்ரோலுடன் கலப்பதற்காக அமெரிக்காவில் இருந்து எத்தனால் இறக்குமதி செய்வதற்கான திட்டம் எதுவும் இல்லை என்றும் அந்த துறை விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் எத்தனால் கொள்முதல் மற்றும் எரிபொருள் கலவை திட்டங்கள் அனைத்தும், நாட்டின் உள்நாட்டு கொள் கைகளின் அடிப்படையிலேயே தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன என வர்த்தக துறை கூறியுள்ளது. ஆந்திராவில் அன்னிய முதலீடு உயர்வு புதுடில்லி: ஆந்திராவில், தெலுங்கு தேசம் தலைமையிலான அரசின் பதவிக்காலத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆறு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெ ரிவிக்கின்றன. இது குறித்து பார்லி.,யில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், 2023 - 24ம் நிதியாண்டில் 9.21 கோடி டாலராக இருந்த அன்னிய முதலீடு, 2024 - 25ல் 23.31 கோடி டாலராகவும், 2025 - 26ல் 60.86 கோடி டாலராகவும் உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். தொழில் செய்வதற்கான சாதகமான சூழலை உருவாக்கியதால் இம்மாநிலம் முதலீட்டு வரவை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். ஸ்டார்ட்அப்களுக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்பு புதுடில்லி: தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், 'டிரேடு கனெக்ட்' மின்னணு தளத்தில் உள்ள 'சோர்ஸ் பிரம் இந்தியா' வசதியில் பதிவு செய்து ஏற்றுமதி வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம் என வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் அறிவித்துள்ளது. இத்தளம், இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் வெளிநாட்டு வாங்குபவர்களை ஒரே இடத்தில் இணைக்கும் டிஜிட்டல் பாலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யும் நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகள், நிறுவன விபரங்கள் மற்றும் திறன்களை வெளிநாட்டு வாங்குபவர்களுக்கு நேரடியாக அறிமுகப்படுத்தும் தனிப்பட்ட பக்கத்தை உருவாக்க முடியும்.