வாஷிங்டன்:இந்தியா இடம்பெற்றுள்ள 'பிரிக்ஸ்' கூட்டமைப்பு, அமெரிக்க டாலருக்கு மாற்றாக பொது கரன்சியை அறிமுகம் செய்தால், அந்நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.இக்கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே நடக்கும் வணிகத்தில், அமெரிக்க டாலருக்கு மாற்றாக, பிரிக்ஸ் பொது கரன்சியை உருவாக்க ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கு, கடந்த டிசம்பர் மாதத்திலேயே டிரம்ப் தன் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். அதில், புதிய பிரிக்ஸ் பொது கரன்சியை உருவாக்கவோ அல்லது அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு எந்த கரன்சியை அறிமுகம் செய்தாலோ, அதை ஏற்கமாட்டோம். இதில் ஈடுபடும் நாடுகள் 100 சதவீத வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்திருந்தார்.இந்நிலையில், புதிய அதிபராக பதவியேற்ற பின் பேசிய அவர், பிரிக்ஸ் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள், தாங்கள் செய்யும் வணிகத்துக்கு, அமெரிக்க டாலருக்கு பதிலாக, மாற்று நாணயத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு செய்ய விரும்பினால், அக்கூட்டமைப்பு நாடுகள், அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் வணிகத்திற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.டாலருக்கு மாற்றாக பொது கரன்சி எதையும் ஏற்படுத்த, பிரிக்ஸ் அமைப்பு திட்டமிடவில்லை என்றும்; அதுபோன்ற யோசனை எதுவும் இந்தியாவிடம் இல்லை எனவும் கடந்த டிசம்பர் மாதத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்திருந்தது நினைவு கூரத்தக்கது.இந்திய உருக்கு, அலுமினியத்துக்கு அமெரிக்கா அதிக வரி விதித்ததையடுத்து, அந்நாட்டின் ஆப்பிள் உள்ளிட்ட பொருட்களுக்கு இந்தியாவும் கூடுதல் வரி விதித்தது
'பதிலடி தர தயங்கக்கூடாது'
நம் நாட்டு பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தால், அதற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என, வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது: இந்தியா அதிக வரி வசூலிப்பதாக, கடந்த டிசம்பரில் நம் நாட்டின் மீது டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அவர், இந்திய பொருட்கள் மீது அதிகளவில் வரிகளை விதித்தால், இந்தியாவும் அமெரிக்க பொருட்களுக்கு அதே அளவு வரிவிதித்து பதிலளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.