டெக்னிக்கல் அனாலிசிஸ் : கன்சாலிடேஷன் நிலையில் இருப்பதுபோல் தெரிகிறது
நிப்டி நேற்று உயர்வுடன் துவங்கிய நிப்டி, வர்த்தகத்தின் இடையே சிறு சிறு ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. இருப்பினும், நாளின் இறுதியில் 49 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளில் 2 உயர்வுடனும், 16 சரிவுடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப் 500' குறியீடு அதிகபட்சமாக 0.02 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.38 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 15 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 6 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 3.48 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 1.60 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,411 நிறுவனங்களின் பங்குகளில் 1,623 ஏற்றத்துடனும்; 1,694 இறக்கத்துடனும்; 94 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி நாளின் இடையில் 23,250க்கு கீழே செல்லாமல் நாளின் இறுதியில் 23,350க்கு மேல் நிறைவடைந்தது ஒரு ஆறுதலான விஷயமாக இருக்கிறது. கடந்த 5 வர்த்தக நாட்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் நிப்டி ஒரு வரம்பிற்குள் பக்கவாட்டு நகர்வில் காணப்படுகிறது. ஆனால், கடந்த 10 வர்த்தக நாட்களின் அடிப்படையில் பார்க்கும்போது, சமீபத்திய இறக்கத்திற்கு பிறகு நிப்டி கன்சாலிடேஷன் நிலையில் இருப்பது போல் தெரிகிறது. மொமென்டம் இண்டிகேட்டர்களான எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.எஸ்.ஐ., பலவீனமாக இருக்கிற போதிலும் ஸ்டொக்காஸ்டிக் இண்டிகேட்டர் மட்டும் குறுகிய கால ஏற்றத்திற்கு சற்று ஆதரவாக உள்ளது. உடனடி ரெசிஸ்டென்ஸான 23,400க்கு மேல் நிலைத்தால் 23,540 நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.