உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  மாறும் இ.டி.எப்., நடைமுறை 7ம் தேதி முதல் அமலாகிறது அடிப்படை விலை, ப்ரீ - ஓபன் ஏல விதிகளில் மாற்றம்

 மாறும் இ.டி.எப்., நடைமுறை 7ம் தேதி முதல் அமலாகிறது அடிப்படை விலை, ப்ரீ - ஓபன் ஏல விதிகளில் மாற்றம்

இ.டி.எப்., முதலீடுகளுக்கான அடிப்படை விலை, ப்ரீ - ஓபன் ஏலம் மற்றும் விலை வரம்பு தொடர்பான விதிகளில், செபி முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. முதலீட்டாளர்களை பாதுகாக்கவும், சந்தையின் அதீத ஏற்ற இறக்கங்களை முறைப்படுத்தவும் கொண்டுவரப்பட்டு உள்ள இந்த புதிய விதிமுறைகள், செப்டம்பர் 7ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.*அடிப்படை விலையில் மாற்றம்:இதுவரை இரண்டு நாட்களுக்கு முந்தைய நாளின் என்.ஏ.வி., அடிப்படை விலையாக இருந்தது. இனி முந்தைய நாளின் கடைசி 30 நிமிட சராசரி சந்தை விலையே அடிப்படை விலையாக கருதப்படும். ஒருவேளை வர்த்தகம் நடைபெறாவிட்டால், கடைசி வர்த்தக விலையோ அல்லது என்.ஏ.வி.,யோ கணக்கில் கொள்ளப்படும்.* ஈக்விட்டி மற்றும் கடன் இ.டி.எப்.,கள்:முன்னதாக 20 சதவீதமாக இருந்த விலை வரம்பு, இனி ஆரம்பத்தில் 10 சதவீதமாக குறைக்கப்படும். 10 சதவீதத்தை தொட்டவுடன் 15 நிமிட 'கூலிங் ஆப்' இடைவேளைக்கு பின், விலை செல்லும் திசையில் வரம்பு மேலும் 5 சதவீதம் அதிகரிக்கப்படும்.*தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எப்.,கள்:இந்த இ.டி.எப்.,களுக்கான ஆரம்ப விலை வரம்பு 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விலை மாற்றங்களுக்கு ஏற்ப, கூலிங் ஆப் இடை வேளைக்கு பின் 3 சதவீதம் படிப்படியாக இது விரிவுபடுத்தப்படும். * புதிய ப்ரீ - ஓபன் முறை:சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலை இரவிலும் மாறுபடுவதால், சரியான தொடக்க விலையை நிர்ணயிக்க, பங்குகளுக்கு இருப்பது போலவே முதல் முறையாக தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எப்., களுக்கும் 'ப்ரீ - ஓபன்' ஏல முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.* குளோஸ் - அவுட் நடைமுறை:'ஓவர்நைட் மற்றும் லிக்விட்' இ.டி.எப்., வர்த்தகத்தில் யூனிட்களை வழங்க தவறினால் அதற்கான தீர்வு விலை, செட்டில்மென்ட் காலத்தில் பதிவான அதிகபட்ச விலை அல்லது இறுதி விலையை விட 5 சதவீதம் கூடுதல், இதில் எது அதிகமோ அதை கொண்டு கணக்கிடப்படும்.* சீரான விலை வரம்பு:என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ., என இரு சந்தைகளிலும் ஏற்படும் விலை முரண்பாடுகளை தவிர்க்க, ஒரு சந்தையில் விலை வரம்பு விரிவுபடுத்தப்பட்டால், மற்றொரு சந்தையிலும் அதே வரம்பு உடனடியாக அமல்படுத்தப்படும்.இந்த மாற்றங்களால் இ.டி.எப்.,களின் விலை அதன் உண்மையான மதிப்பை ஒட்டியே இருக்கும். எனவே, முதலீட்டாளர்கள் சந்தை விலையில் வாங்குவதை தவிர்த்து, 'லிமிட்' ஆர்டர்களை பயன்படுத்துவதும், மதிப்பை கவனித்து முதலீடு செய்வதும் பாதுகாப்பானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்